"அந்த அம்மாவுக்கும் இத்தனை நாள் தெரியாது. இன்றைக்குத் தான் கண்டுபிடித்தார்கள்."
"அமெரிக்காவா, ஆஸ்திரேலியாவா. என்னை அவர்கள் கண்டுபிடிக்க."
"பொய்யா சொல்கிறேன்?"
"என்ன செய்தி? விளக்கமாகச் சொல்."
அந்த அம்மாவின் அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறார். முன்னமே ஒருமுறை வந்தபோதும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இன்றைக்கு என்னென்னவோ பேசியிருந்து விட்டு, குடும்பத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். அப்போது தெரிந்துவிட்டது."
"என்ன தெரிந்துவிட்டது?" என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். "சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?" என்றேன்.
மனைவி சிரித்தாள். "சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்" என்றாள். "உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன என்று கேட்டார். பேரைச் சொன்னவுடன், சற்று விழித்துப் பார்த்தபடி இருந்துவிட்டு, ஊர் எது என்று கேட்டார். வாலாசா என்று சொன்னவுடன், திகைத்தாற்போல் இருந்தார். உடனே உங்கள் வீட்டுக்காரருக்குச் சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறாரா என்று கேட்டார். அப்போது அவருடைய திகைப்பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. 'ஆமாம் இருக்கிறார். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?' என்றேன். 'சொல்கிறேன். நீ வேலய்யாவுக்கு மனைவியாக வருவதற்கு முன்னிருந்தே அவரை எனக்குத் தெரியும்' என்று என்னிடம் சொல்லிவிட்டு, பிறகு தம் தங்கையைப் பார்த்து, 'தெரியுதா'டி உனக்கு நினைவு வருகிறதா’டி' என்று கேட்டார். 'யார்? நம் சந்திர அண்ணாவா!' என்று பச்சைமலையின் மனைவி உடனே அக்காவைக் கேட்டார். ஆமாம் என்றார் அந்த அக்கா. 'அவர்தான் அப்போதே எங்கோ போய் விட்டாரே அவரைப் பற்றி அப்புறம் ஒன்றுமே தெரியாதே' என்றார் தங்கை. எனக்குத்