(Reading time: 20 - 40 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

தான் வருந்துகிறான்; பெரிய தோப்பு உடையவன் ஒரு செடிக்காவும் கவலைப்படுவதில்லை; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில்லை. இரண்டு மூன்று பெரிய மரங்கள் பட்டுப்போனால் தான் அவனுடைய மனம் கொஞ்சம் அசையும். அப்போதும் அவன், சின்ன தோட்டம் பயிரிடுகின்றவனைப் போல் அவ்வளவு கவலைப்பட மாட்டான் அல்லவா? என் மனநிலையும் அப்படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து அளவில் என் பழக்கமும் தொடர்பும் இருந்தன. இப்போது பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடும் ஆயிரக்கணக்கானவர்களோடும் பழக நேர்ந்துவிட்டதால், உணர்ச்சிகளின் ஆழம் குறைந்துவிட்டது. அதனால் சந்திரனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்போல் இல்லை எனலாம்.

  

நான் தொழில் காரணமாகவும் வேறு காரணமாகவும் நூற்றுக்கணக்கானவர்களோடு பழகிய போதிலும், ஒரு சிலர் தான் உண்மையாக என்னுடன் நெருங்கிய பழக்கம் உடையவர்கள். அவர்களிடம் என் மனம் கொஞ்சம் ஆழ்ந்த நட்பும் கொண்டது என்று சொல்லலாம்.

  

அவர்களுள், என் அலுவலகத்தில் என்னோடு தொழில் செய்த நண்பர் ஒருவர். அவருடைய பெயர் பச்சைமலை. நல்ல பண்புகள் உடையவர். பலரோடு பழகமாட்டார். பழகும் சிலரிடத்தில் அன்பாகப் பழகுவார். அலுவலகத்தில் வேலையாட்களையும் மனம் நோகப் பேசாதவர். ஆனால் வேலையில் திறமையானவர். அப்படிப்பட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டுக்கு வரப் போகப் பழகினார். நாங்களும் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். நாளடைவில் பெண்களுக்குள் பழக்கம் மிகுந்தது. நான் வேலை மிகுதியாக இருந்தபோது மனைவி மட்டும் அங்கே போய் வருவதும் பழக்கமாயிற்று.

  

ஒரு நாள் இரவு நான் வீட்டுக்குத் திரும்பியதும் "பச்சைமலையின் மனைவி உங்களுக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியுமாமே" என்றாள்.

  

"உனக்குப் பைத்தியம்! நாம் எங்கிருந்தோ பிழைக்க வந்தோம். நாம் யார்? அவர்கள் யார்? இப்போதுதானே பழக்கம்! என்ன உளறுகிறாய்?" என்றேன்.

  

"அவர் உங்களுக்குச் சொல்லவே இல்லையா?"

  

"நீ என்னதான் சொல்கிறாய்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.