"அதுதானே இல்லை! இவ்வளவு சொன்ன பிறகும் அந்த அம்மா சந்திரனுக்காக வருத்தப்படுகிறார். இரக்கத்தோடு பேசுகிறார். தமக்குத் தெரிந்தவரையில் சந்திரன் மிக நல்ல குணமுள்ளவர் என்கிறார். அவரைப்போல் நல்ல மனம் உள்ளவர்களைப் பார்ப்பது அருமை என்கிறார். சந்திரனைப் பற்றி நீங்களும் அவ்வளவு நன்றாகச் சொன்னதே இல்லை" என்றாள்.
என் உள்ளம் குழைந்தது. "ஆமாம். அவ்வளவு நல்லவனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் அவன் மேல் ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்லவன்தான் பிறகு இப்படி மாறிக் கெட்டு விட்டான். அதுதான் எனக்கு வருத்தம்" என்றேன்.
"உங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று அந்த அம்மா விரும்புகிறார். என்னோடு உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார். வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னதால் நின்றுவிட்டார். நாளை மறுநாள் அவர்களுடைய ஊருக்கே திரும்பிப் போகிறபடியால் நீங்கள் நாளைக்கே போய்ப் பார்த்துவிடுங்கள். நீங்கள் போகாவிட்டால் அந்த அம்மா தவறாமல் இங்கே வந்துவிடுவார்" என்றாள்.
"அப்படியானால், பச்சைமலையின் மனைவியின் பெயர் என்ன? திருமகளா?" என்றேன்.
"ஆமாம். உங்களுக்கு இவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே. பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே, கணவர் தம் மனைவியைக் கூப்பிடும் போது "திரு" என்று அழைப்பார்" என்றாள்.
"நான் சின்ன வயதில் பார்த்தது உண்டு. அப்போதிருந்தே பெயரும் தெரியும். ஆனால் இந்தக் குடும்பம் என்று எப்படித் தெரியும்?" என்றேன்.
பிறகு, சந்திரன் படித்துக் கொண்டிருந்தபோது இமாவதியின் குடும்பத்தோடு பழகியதும், இமாவதியின் திருமண அழைப்பைப் பார்த்தவுடன் கலங்கி அழுததும், உடனே சொல்லாமல் ஓடிப் போனதும், பிறகு தேடிப் போய் அவனை அழைத்து வந்ததும் எல்லாம் விரிவாக மனைவிக்கும் சொன்னேன்.
"அப்படியானால், அடிப்படையிலேயே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது"