சுயம்பு, உட்காரவில்லை. இதற்குள் தட்டெழுத்துப் பெண் ஒருத்தி கையில் ஒரு ஃபைலோடு வாசல் பக்கம் நின்றாள். அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துப் பேச்சு நடப்பதைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் பைல் கட்டை அலட்சியமாக மேஜையில் வீசி அடிப்பதுபோல் வைத்துவிட்டு, இடுப்பில் கை வைத்து நிற்காமல், அவள் காலடியால் அவர்கள் கவனம் கலையக்கூடாது என்பது போல் மெள்ள மெள்ள நடந்தாள். அது அவள் நடத்தையையும் காட்டியது. பதிவாளரும், அவளும் யோக்கியமானவர்கள் என்பதை விஷூவலாகக் காட்டுவது போலவும் இருந்தது. பதிவாளர், அவள் மேஜையில் வைத்த பொன்வண்ணக் கோப்பை வாங்கி, அச்சடித்தது போலான மின்னணு டைப்பிங் காகிதத்தை பிள்ளையாரிடம் நீட்ட, அவர் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ஆறுமுகப் பாண்டியிடம் கொடுத்தார். அவன் படித்துப் பார்த்துவிட்டு மன்றாடினான்.
“இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சிடுங்க சார். இவன் அப்படிப்பட்டவன் இல்ல சார். ஒரு புழுவைப் பார்த்தாக் கூட ஒதுங்கிப் போறவனை ஒரு புழுவாய் ஆக்கிடாதீங்க சார்.”
பதிவாளர் ரிப்பன்களைப் பூவாக வைத்திருந்த அந்தப் பெண்ணைக் குறிப்பாய்ப் பார்க்க, அவள் வெளியேறினாள். அந்த அறையின் அறைக் கதவுகளின் ஆட்டத்தையே பார்த்தவர், அந்த ஆட்டம் முடிந்ததும் பேசினார்.
“நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி, இது முடிஞ்சு போன விஷயங்க. இவன் நல்ல பையன். அப்படிப்பட்டவன் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் ரெண்டு தடவை இப்படி நடந்தவன் மூன்றாவது தடவை வேற மாதிரியும் நடக்கலாம் இல்லியா. அதோட.... சரி, அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நாங்க ஒங்க பையனை நீக்கலன்னா, போலீஸ் கேஸாயிடும். அன்றைக்கே எஸ்.பி. உங்க பையனை ஒப்படைக்கும்படியாய்ச் சொன்னார். நான்தான் மறுத்துட்டேன். இன்றைக்குக்கூட ரெண்டு தடவை போன் செய்துட்டார். போலிஸ்ல மாட்டுனால், என்ன ஆகும்னு ஒங்களுக்கே தெரியும். விவகாரம் கோர்ட்டுக்குப் போனால் யுனிவர்சிட்டியோட எல்லாக் கதவையும் இழுத்து மூட வேண்டியதுதான். தனி மனிதனைவிட, ஒரு நிறுவனம் ரொம்ப முக்கியம் இல்லியா. நாங்க, இவன், அந்த பொண்ணுகிட்ட நடந்தது சரிதான்னு கோர்ட்ல வாதாட முடியுமா. நீங்களே சொல்லுங்க...”
“இவன் நடந்ததை சரின்னு சொல்லலை சார். சரிப்படுத்துங்கன்னுதான் சொல்றேன். கருணை