அதற்கு மேல் அங்கே அதிகமாகப் பேச முடியவில்லை. பக்கத்தில் எதிர் 'சீட்' பெண்களை ஏதோ ஒரு சாக்கில் காலால், கையால், விரல்களால் தொடவிரும்பும் ஆண்கள். ஒரு பெண் படீரென்று திரும்பி வெடுக்கென்று ஒருத்தனை முறைத்துப் பாத்துவிட்டு தன் பின்னலை எடுத்து முன்னே போட்டபடி 'தூ! மானங்கெட்ட ஜன்மம்" என்று சற்று உரக்கவே முணு முணுத்தாள்.
"திரையில் எத்தனை விகாரமான காட்சிகள் ஓடினாலும் மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாத விகார வக்ர புத்தி மலிந்தவர்கள் நாட்டில் மலிவாக இருப்பதே இதற்குக் காரணம்" படித்தவள், மிகப்படித்தவள் மாதிரி இருந்த ஒரு அம்மாள், பின்னலைப் போட்டுக்கொண்ட பெண்ணிடம் சொன்னாள்.
பாலுவுக்கு சுரீர் என்றது. நர்மதா மறுபடியும் அந்தக் கரம் தன்னைத் தீண்டவேண்டும் என்று விரும்பி அடிக்கடித் திரும்பிப் பார்த்தாள். பட்டப்பா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் வீடு திரும்பும்போது பூரணியும், கங்கம்மாவும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். கவிந்திருந்த பன்னீர் மரத்தில் வெள்ளை மலர்கள் வாசம் வீசீன. மரத்தில் அடைந்திருந்த குருவிகள் பொழுது விடிந்துவிட்டதாக நினைத்துக் கத்தின.
'அதோ வந்தாச்சு" என்றபடி கங்மம்மா கிளம்பினாள்.
"ரொம்ப சோந்து போயிருக்கே, மோராவது சாப்பிட்டுத் தூங்கு" சொல்லிக்கொண்டே கங்கம்மா தன் வீட்டுக்குள் சென்றாள்.
பூரணி உண்டாகியிருப்பதுபோல் நர்மதாவும் இருக்க வேண்டும் என்று அவள் ஆசைபட்டாள்.
"ஏழுமலையானே! கண் திறடா அப்பா"
மங்கிய நெய் விளக்கின் ஒளியில் ஏழுமலையான் நகை சிந்திக்கொண்டிருந்தான். "ஸ்ரீயக் காந்தாய” என்று கங்கம்மா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.