அவளுக்குக் கோபம் வந்தது. பரபரவென்று எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்தாள். சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியப் பாலை மட்டும் சாப்பிட்டாள். அதில் கொஞ்சம் மீற்றி அவனிடம் கொடுத்தாள்.
"நீ சரியாச் சாப்பிடவில்லையே. பாலையாவது சாப்பிடேன்"
இப்போது இருவரும் படுக்கை அறைக்குள் இருந்தார்கள்.
"பகவானின் பிரசாதம் சாப்பிட்டாலாவது என்னுடைய தகிப்பு அடங்குமோன்னு பார்க்கிறேன்”
பட்டப்பா விக்கித்துப் போய் நின்றான்.
அவனுக்குப் புரிந்தது.
"நர்மதா! உன்னை நான் வேணும்னு ஏமாத்தலை. எனக்கு இப்படியொரு குறை இருக்குன்னு எங்க குடும்பத்திலே யாருக்கும் தெரியாது. வெளியிலே சொல்லக்கூடிய குறையில்லை இது. எனக்கு அம்மா அப்பா இல்லை. அக்கா வீட்டிலே வளர்ந்தேன். பெரிய படிப்பாளியுமில்லை. நிறைய சிநேகிதர்கள் என்கிற வியாபகமும் கிடையாது. பெண்களைக் கண்டால் மனசிலே ஒரு மலர்ச்சி ஏற்படும். அவர்களின் சௌந்தர்யத்திலே ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். சரீர சுகத்திலே திளைக்கவேண்டும் என்கிற நினைப்பே எனக்கு எழவில்லை “
"எனக்கு ஆசை இருக்கிறதே. என்னை அது சுட்டுப் பொசுக்குகிறதே" என்று அவள் அலற நினைத்தாள். ஆனால், தேம்பித் தேம்பி அழுதாள்.
இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
பூரணி பாலுவிடம், "பாவம்! அந்தப் பெண் எப்படி எப்படியோ இருக்க வேண்டியவள். இந்தக் குரங்கிடம் அகப் பட்டு கசங்கறது." என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பாலு நர்மதாவின் நினைவாகவே இருந்தான். பூரணியின் பக்கத்தில் மிக நெருக்கமாக நின்றாலும், அவள்