இதெல்லாம்” என்று ஒரே வார்த்தையில் கூறி விடுவாள் ருக்மிணி. அவள் கணவன் தன் வேட்டகத்தை ஒரு சுரங்க மாகவே கருதி வந்தான். அவன் தீய நடவடிக்கைகளுக்குப் பணம் தேவையான போதெல்லாம் மனைவியின் மூலம் வேட்கத்திலிருந்து பணத்தை எதிர் பார்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த விஷயம்.
இதை யெல்லாம் எண்ணியபடி சிந்தனையில் மூழ்கி இருந்த சர்மா அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தார். கூடத்தில் மாட்டியிருந்த பெரிய கடியாரத்தின் 'டக் டிக்’ என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவுமில்லாமல் அங்கே அமைதி நிலவியது.
டாக்டர் மகாதேவன் அந்த வட்டாரத்தில் பெரிய நிபுணர் என்று பெயர் வாங்கியவர். ரண சிகிச்சையில் அவர், பார்த்த கேசுகளில் யாருக்கும் கெடுதி நேரிட்டது கிடையாது. திறமைக்கு ஏற்றாற்போல் செல்வமும் குவிந்து கிடந்தது. அருமையாக ஒரே ஒரு பெண் மட்டும் திரண்ட இவ்வளவு ஆஸ்தியையும் அனுபவிப்பதற்கு இருந்தாள். ஒரே குழந்தையாக இருந்ததால் மகாதேவன் தம்பதி அவர்கள் பெண் நீலாவை அளவுக்கு மீறிய சலுகை காண்பித்து வளர்த்தார்கள்.
போதாக் குறைக்கு கலாசாலைப் படிப்பும், சங்கீதமும் வேறு நீலாவைச் சற்று நிலை தடுமாறச் செய்தன எனலாம். காலேஜிலே படித்த பெண்கள் எல்லாம் நீலாவைப் போல் இல்லை. சங்கீத மேதைகளான அநேகம் பெண்கள் அன்பும், அடக்கமும் பூண்டு வாழவில்லையா என்ன? நீலா தனக்கு இருக்கும் திரண்ட செல்வத்தையும் அதனால் தன்னுடைய செல்வாக்கான நிலையையும் கண்டு இறுமாந்திருந்தாள்.
டாக்டர் மகாதேவனும், சர்மாவும் 'மாலைச் சங்கத்' தில் (Evening Club) அங்கத்தினர்கள். இருவரும் நண்பர் களாயினர். மகாதேவனுக்குச் சங்கரனின் சரளமான குணம் பிடித்திருந்தது. ஏறக்குறைய ஒரே அந்தஸ்தில் இருக்கும் அவனுக்குத் தன் பெண் நீலாவை மணமுடிக்க ஆசைப்பட்டார் மகாதேவன். இரண்டொரு தடவை சர்மாவிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுக்கும்படியும் கேட்டார். தன்னுடைய அந்தஸ்தை விட ஒரு படி மேலாக இருக்கும் மகாதேவனுடன் சம்பந்தம் செய்வதற்கு யோசித் தார் சர்மா. மூன்று வேளையும் சோபாவில் சாய்ந்து நாவல் களைப் படித்துக் குவிக்கும் நீலா, கர்னாடகப் பழக்க வழக்கமுள்ள தன் மனைவியிடம் மாட்டுப் பெண்ணாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது.