மீனாட்சியையும், ருக்மிணியையும் கண்டதும் அவள் தன் புருவங்களை நெரித்து ஒரு ஆச்சர்யத்தை வரவழைத்துக் கொண்டாள் தன்னுடைய முகத்தில். கூடத்தில் யாரோ வந்திருப்பதைத் தன் தாயாரிடம் தெரிவிப்பதற்காக அவள் பின் கட்டுக்கு விரைந்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் டாக்டர் மகாதேவனின் மனைவி சீதாலட்சுமி அவசரமாக ஹாலுக்கு வந்து இருவரையும் உபசாரம் செய்து வரவேற்றாள்.
"நீங்கள் வரப்போவதாக பத்து நிமிஷங்களுக்கு முன்பு தான் 'போனி'ல் கூப்பிட்டுச் சொன்னார். எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்" என்றாள் சீதாலட்சுமி. சம்பந்தி வீட்டாரிடமிருந்து பலமான உபசாரங்களை எதிர்பார்க்கும் மீனாட்சி அம்மாளுக்கு முதலில் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தங்கள் வரவை எதிர் பார்ப்பதாகச் சொல்லும் சம்பந்தி அம்மாள் தாங்கள் வந்து பத்து நிமிஷங்களுக்கு அப்புறமே கவனிப்பதைக் கண்டவுடன் கொஞ்சம் அவமான மாகவும் இருந்தது. இருந்தாலும் வெளிக்குத் தன் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தாள் மீனாட்சி அம்மாள்.
ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் கட்டத் துணியின்றித் தவிக்கும் நாட்டில் டாக்டர் மகாதேவன் வீட்டுக் கதவு களும், ஜன்னல்களும் உயர்தர மஸ்லின் திரை அணிந்து காணப்பட்டன. ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் கருங்காலி மேஜை மீது தந்தச் சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. அழகிய சீனா பூ தொட்டியில் மலர்ந்த ரோஜா மலர்களைச் செருகி வைத்திருந்தார்கள். பளிச்சென்று எங்கு பார்த்தாலும் துப்புரவாக இருந்தது. கீழே பளிங்குத் தரையில் அழகான காஷ்மீரக் கம்பளம் விரித்திருந்தார்கள்.
சற்று முன்பு பஞ்சாபி உடை அணிந்திருந்த நீலா இப்பொழுது மைசூர் கிரேப் பாவாடையும், ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு வந்தாள். பரிசார்கன் இரண்டு தட்டுகளில் சிற்றுண்டியையும், காபியையும் வைத்து விட்டுப் போனதும் நீலா வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு, மீனாட்சி அம்மாளையும் ருக்மிணியையும் வணங்கினாள். எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த சீதாலட்சுமியைப் பார்த்து மீனாட்சி சிரித்துக் கொண்டே, "குழந்தைக்குப் பாடத் தெரியுமா?" என்று சம்பிர தாயத்தை விடாமல் கேட்டாள்.
"பாட்டிலே அவள் அதிக அக்கறை காட்டவில்லை. நாங்களும் வற்புறுத்த வில்லை” என்று சுருக்கமாகக் கூறினாள் சீதாலட்சுமி.