குற்றத்துக்காக அவள் மனம் வருந்தி துன்ப வாழ்க்கை நடத்துவதும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான். சமையல்காரிக்கு உதவியாக வேலைகள் செய்தது போக எஞ்சி இருக்கும் நேரத்தைக் குடும்பத்துக்கு வேண்டிய துணிமணிகள் தைப்பதில் கழிப்பாள் சம்பகம்,
“குழந்தை பானு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து விட்டாளா?" என்று சர்மா கேட்டார்.
"இன்றைக்கு மத்தியானம் அவளுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறையாம். அந்தப் பக்கத்தில் இருக்கிறாள் போல் இருக்கிறது" என்று கூறிவிட்டு, பானுவை அழைத்து வர கொல்லைப் பக்கம் சென்றாள் சம்பகம்.
கொல்லையில் ஒரு மாமரத்தடியில் பானு கண்கள் சிவக்க அழுது கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த சம்பகத்துக்கு வேதனை நெஞ்சைப் பிழிந்தது.
"அம்மா! பாட்டியும், அத்தையும் என்னை அவர்களுடன் வரக் கூடாதென்று சொல்லி விட்டார்கள்" என்று கூறி,பானு பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
'குழந்தையிடமா இவர்கள் மனக் கசப்பைக் காட்ட வேண்டும். தன் பிள்ளையின் குழந்தை என்கிற பாசம் கூடப் போய்விட்டதோ" என்று சம்பகம் வேதனைப் பட்டாள்.
"பானு! தாத்தா உன்னைக் கூப்பிடுகிறார் அம்மா. அழாமல் சமத்தாக உள்ளே போய் என்ன என்று கேள் பார்க்கலாம்" என்று அவளைத் தேற்றி சம்பகம் உள்ளே அனுப்பினாள்.
உலகத்திலே 'தாய் இல்லாத பிறந்தகமும், கணவன் இல்லாத புக்ககமும் போல்' என்று சொல்லுவது சம்பகத்தின் வரையில் பொருத்தமாக இருந்தது.
---
முத்தையாவின் கடிதம் வந்த பிறகு காமுவின வீட்டில் தினம் ராமபத்திர அய்யருக்கும் அவர் மனைவிக்கும் ஏதாவது சில்லறை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன.தம்பிக்குப் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதமாக இருந்தாள் விசாலாட்சி. தம்பியின் வயதோ, மூன்றாந்தாரம் என்கிற