அதற்குள் கொல்லைப் பக்கத்தில் கட்டியிருந்த கறவைப் பசு மத்தியானத் தீனிக்காக ' அம்மா' என்று கத்த ஆரம்பித்தது. காமு சரேலென்று எழுந்து கொல்லைப் பக்கம் போவதற்காக வெளியே வந்தாள். சங்கரனின் கண்களும் அவள் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன..
அகன்ற அக் கருவிழிகள் சிவந்தும் வீங்கியும் இருந்தன. தள தளவென்று சிரிப்புடன் விளங்கும் அவள் அழகிய வதனம் வாடிப் போயிருந்தது. தவிர அவள் கொஞ்சம் களைத்துப் போய் இருப்பதாகவும் சங்கரன் நினைத்தான். ஒரு வினாடிக்குள் காமு சட்டென்று கொல்லைப் பக்கம் போய் விட்டாள்.
“என்ன மாமா புதிர் போட்டுப் பேசுகிறீர்கள்? என்னிடம் சொல்லக் கூடுமானால் விஷயத்தைச் சொல்லுங் களேன்!" என்று சங்கரன் அவரை வற்புறுத்தினான்.
குறுகிய சில நாட்களுக்குள் சங்கரனுக்கும், ராமபத்திர அய்யருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது. சங்கரனின் வெள்ளை மனமும், பணக்கார வீட்டுப் பிள்ளை என்கிற அகம்பாவம் இல்லாமல் அவன் சரளமாக எல்லோரிடமும் பழகும் சுபாவமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. சங்கரன் கேட்டதும் ராமபத்திர அய்யர் கூடத்தில் கடியாரத்துக்குப் பின்புறமிருந்து கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
கடிதத்தை வாசித்து முடித்ததும் சங்கரன் ஒரு நிமிஷம் யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் மனக் கண் முன்பு காமுவின் உருவம் பல தடவைகள் நிழல் படம் போல் சுழன்று சுழன்று தோன்றியது. பதினெட்டு வயசு நிரம்பி, அன்று மலர்ந்த மலரைப் போல் இருக்கும் காமு, நாற்பத்து மூன்று வயசுக்காரனை மணந்து கொள்வதா? பதினாறு வயசில் தனக்கு ஒரு பெண் இருக்கும் போது பதினெட்டு வயசு மங்கை ஒருத்தியை மனைவியாக ஏற்றுக் கொள்ள முத்தையாவின் மனம் ஒப்புகிறது. கடிதம் எழுதவும் தூண்டுகிறது!
அங்கு நிலவி இருக்கும் மௌனத்தை மீறிக் கொண்டு, "பொழுது விடிந்து அஸ்தமிப்பதற்குள் நூறு தடவை அம்மாமி. என்னைத் துணப்பி எடுக்கிறாள் அப்பா! பெண்ணுக்கு வயசாகி வருகிறதே என்கிற விசாரம் அவளுக்கு. ஆனால், காமுவை மூன்றாந்தாரமாகக் கொடுப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை” என்றார் ராமபத்திர அய்யர்.