நாளைக்குக் கணவனாக வரிக்கப் போகிறவனை 'மிஸ்டர் சங்கரன்' என்று மாமியாராகப் போகிறவளின் எதிரிலேயே கூறும் நீலாவின் நாகரிகம் அவளுக்குப் பிடிக்கவில்லை. பக்கத்தில் தந்தப் பேழையில் மின்னும் நகைகள். அரண்மனை போன்ற வீடு. டாக்டர் மகாதேவனுக்கு நீலா ஒரே பெண். திரண்ட இவ்வளவு ஐச்வர்யத்தையும் ஸ்ரீதனமாகக் கொண்டு வரும் நீலா சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமியைப் போலவே அவள் கண்களுக்குத் தோன்றினாள். அவளிடம் காணப்படும் குற்றங் குறைகளை மீனாட்சி அம்மாள் பெரிதாக மதிக்கவில்லை.
தாயும், மகளும் தாம்பூலம் பெற்றுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினர். அன்றே மீனாட்சி தன் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தாள்: நிலம் வாங்குவதற்காக அதிக நாட்கள் தாமதிக்க வேண்டா மென்றும் உடனே புறப்பட்டு வரும்படியும் அதில் குறிப்பிட்டிருந்தாள்.
அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த தகவலைத்தான் சங்கரன் ராமபத்திர அய்யரிடம் முன்பு கூறினான்.
"எந்தன் இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன? இன்பம் வருகுதென்று சொல், சொல் சொல் கிளியே!" என்று காமு, இசைத்தட்டில் கேட்டுப் பழகியிருந்த பாட்டைப் பாடிக் கொண்டே கீரைப் பாத்தியைக் கொத்தி விட்டு விதை தெளிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.
இரண்டு மூன்று தினங்களாகவே காமுவின் மனம் நிறைந்திருந்தது. உள்ளம் இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நொடிக் கொருதரம் யாரும் பார்க்காத வேளைகளில் நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் அழகைக் கண்டு பிரமித்து நின்றாள். நெற்றியில் அலை அலையாகச் சுருண்டு விழும் கூந்தலைக் கண்டு சங்கரன் மோகித்து விட்டானா வேலைப் போன்ற கருமணிக் கண்களின் காந்த சக்தியில் மனத்தைப் பறி கொடுத்து விட்டானா? வீட்டு வேலைகளில் தான் காட்டும் கைத்திறமையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து விட்டானா? எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் தந்தையின் ஏழ்மை நிலையைக் கண்டு பரிதாபம் கொண்டா தன்னை அவன் மணக்க விரும்புகிறான்? கையில் பிடித்திருந்த மண் வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் காமு.
அவனிடமிருந்து இரக்கமும், பச்சாத்தாபமும் பெற காமு விரும்பவில்லை. பெண்மை