Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 07 - சரோஜா ராமமூர்த்தி
பாவம், சங்கரன்!
கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத்துச் சுவரில் மாட்டப்பட்ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவைப் பார்த்து எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்கே காட்சி அளித்தது. காமு தன் உள்ளத்தில் எழும்பய பல உணர்ச்சிகளை எவ்வளவோ கட்டுப்படுத்தினாள். கட்டுப் படுத்தவும் முயற்சித்தாள். ஆனால் ஆசைதான் வெற்றி கொண்டது.
"நீலா உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டா?" என்று புகைப்படத்தைக் காண்பித்துக் கொண்டே கமலாவிடம் கேட்டாள் காமு.
"அந்தப் பெண் அவ்வளவாக யாரையுமே மதிப்ப தில்லை, காமு!" என்று கமலா தன் அபிப்பிராயத்தை அறிவித்ததும், காமுவின் கொந்தளிக்கும் உள்ளம் சற்று ஆறுதல் அடைந்தது. காமுவைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? கலாசாலைப் படிப்பு படித்திருக்கிறாள். வசதி இருந்தால் காமுவும் படித்து இருக்க மாட்டாளா என்ன? ஏழை உபாத்தியாயரின் பெண்ணாக மட்டும் காமு பிறக்காமல் இருந்தால், கலாசாலை என்ன உயர்தரக் கல்விக்காகக் கடல் கடந்து கூடப் போயிருப்பாளே? காமுவின் தாழம்பூ மேனியைவிட நீலாவின் வெள்ளை நிறம் ஒன்றும் பிரமாத அழகு வாய்ந்ததில்லை. காமுவின் கருமணிக் கண்களைவிட நீலாவின் பூனைக்கண் அவ்வளவு பிரமாதமில்லை. கண்களுக்கு எவ்வளவு தான் மையைத் தீட்டிக் கொண்டாலும், இயற்கையாக நீண்டு விளங்கும் கண்களைப் போல் ஆகிவிடுமா என்ன? நீலாவுக்குச் சற்றுப் பூனைக்கண் சற்றுப் பூனைக்கண் தான்! நாழிக்கொரு உடையும், வேளைக்கொரு அலங்காரமுமாக, பகட்டால் அவள் அதிக அழகிபோல் தோற்றமளிக்கிறாள், அவ்வளவு தான்!
அப்பப்பா! சிந்தனையின் வேகம்தான் எவ்வளவு? நொடிப்பொழுதில் நீலாவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டுவிட்டாள் காமு.
"என்ன காமு, ஒரே யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்று அவள் சிந்தனை வேகத்துக்குக் கமலா கடிவாளம் போட்டு இழுத்த பிறகுதான் காமு இந்த உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள்,