போல் தான் இருக்கின்றன" என்று சம்பகம் வாய் விட்டுக் கூறினாள்.
ஒரு தடவை அவள் கணவன் சம்பகத்தைப் பார்த்து 'இப்படி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பாக இருக்கிறேனே? பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்த மாதிரி இருக்கிறதே உன்னையும் என்னையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தினால்! எதைக் கண்டு என்னிடம் மயங்கி விட்டாய் சம்பகா?" என்று கேட்டான்.
சம்பகம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். ஆழ்ந்து தன்னையே நோக்கும் புருஷனின் கண்களின் குளுமையான பார்வையைச் சந்திக்கும் சக்தியை இழந்துதான் அவள் தலையைக் குனிந்து கொண்டாள். மீண்டும் அவன் அவளை வற்புறுத்திக் கேட்டதும், "உங்கள் கண்களின் அழகில் மயங்கித்தான்!” என்று உதடு அசங்காமல் சம்பகம் கூறினாள். அவை யெல்லாம் இன்று கனவு போல் ஆகிவிட்டன. மேல் படிப்புக்காக அயல் நாடு போனவன், மனைவி குழந்தையை மறந்து விட்டான்!
பானு தூங்கி விட்டாள். அவள் தூங்கியதையும் கவனியாமல் சம்பகம் இறந்த காலத்தைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மனைவியின் வரவை எதிர்பார்த்துக் கண்: பூத்துப் போய், தோட்டத்துப் பக்கம் வந்தான் சங்கரன். மல்லிகைப் பந்தலின் கீழே உட்கார்ந்திருந்த சம்பகத்தைப் பார்த்ததும், 'மன்னி! நீலா உங்களிடமும் சொல்லிவிட்டு வெளியே போகவில்லையா?” என்று கேட்டான்.
நீலாவைப் பற்றி அவனிடம் என்ன கூறுவது? "உன் மனைவி யாரைத்தான் மதிக்கிறாள்? அவள் மகா கர்வக்காரி, அகம்பாவம் பிடித்தவள்” என்று அவனிடம் சொல்வது சரியாகுமா? சம்பகத்தின் பெருந்தன்மையான குணம், பொறுமை, நிதானம் முதலியவை அவளை அவ்விதம் கூறவொட்டாமல் தடுத்தன.
'கிளம்புகிற போது நான் சமையலறையில் வேலையாக இருந்தேன். உலக அனுபவமும் குடும்பப் பொறுப்பும் ஏற்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகவேண்டும். பிறகு தன்னால் திருந்திவிடுவாள், பாருங்கள்” என்று இருவருக்கும் பொதுவாகப் பேசினாள் சம்பகம்,
தெருவில் பளபளவென்று மின்னிக் கொண்டு நீலாவின் கார் வேகமாக உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கி கையிலிருந்த அழகுப் பையைச் சுழற்றிக் கொண்டே ஒய்யார நடை போட்டுக் கொண்டு வந்தாள் நீலா.
தொடரும்...