Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 06 - சரோஜா ராமமூர்த்தி
இடமாற்றம்
சங்கரன் பொன்மணி கிராமத்தை விட்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை யில் இந்த ஆறு மாதங்கள் பல மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டன. மாமனாரால் பரிசாக அளிக்கப்பட்ட நீல வர்ணக் காரில் அவன் மனைவியும், அவனும் உல்லாசமாக பவனி வருவது சகஜமாகி விட்டது. அவள் கொண்டு வந்த சீர் சிறப்புகளை ஊராரிடம் காட்டி மகிழ்வது மீனாட்சி அம்மாளுடைய வேலை. ஆனால், பொன்மணி கிராமத்தில் ராமபத்திர அய்யரின் மனத்துக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் சித்த சுவாதீனத்தை இழந்தார்.
காமுவின் வாழ்வில் மட்டும் எந்தவிதமான மாறுதலை யும் இந்த ஆறு மாதங்கள் சிருஷ்டிக்கவில்லை. வசந்த காலம், கல்யாண மாதங்கள் எல்லாம் உருண்டு ஓடிக்கொண்டிருந்தன. கல்யாணமாகாமல் தனக்குப் பளுவாக இருக்கும் மகள் மீது தாய்க்கு வெறுப்பு ஏற்பட்டது. "கிழவனுக்கா கொடுப்பேன் காமுவை? உன் தம்பிக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!" என்று ஏசிய ராமபத்திர அய்யர் மனம் உடைந்து இருந்தார். 'முத்தையா மாமாவையே கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் ஊராரின் கேலிப் பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருக்கலாம். கட்டிக் கொள்ளக் கூடச் சரியான புடவை இல்லாமல் இப்படிச் சீரழிய வேண்டாம்' என்றெல்லாம் நினைத்து வருந்தினாள் காமு.
சித்தசுவாதீனம் இல்லாத தகப்பனாருடனும், சதா சிடுசிடுக்கும் தாயாருடனும் காமுவின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. சங்கரனின் நினைவு மாத்திரம் அவள் மனத்தில் பசுமையுடன் இருந்தது. 'சங்கரன் உன்னுடை யவன்' என்று யாரோ அவள் காதில் கூறுவது போன்ற பிரமை சதா அவளுக்கு ஏற்பட்டு வந்தது. இந்த ஆசை அநியாயமானது என்பதை உணர்ந்தே காமுவின் மனம் ஆசைப் புயலில் சிக்குண்டு தவித்தது.
கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் பிராம்மணப் பிள்ளை ஒருவன் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தான். தன் புத்தி நிதானத்துக்கு வந்தபோது ராமபத்திர அய்யர் காமுவைக் கூப்பிட்டுக் கேட்டார். மெளனமாகக் கண்ணீர் வழிய நிற்கும் காமுவைப் பார்த்ததும் அவள் மனநிலை அவருக்கு விளங்கியது. தானே அவளிடம் ஆசைப் பயிரை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்து, அதை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டது எவ்வளவு மகத்தான பாவம்