என்பதை விவேக்சாலியான அவர் மனது அறிந்து கொண்டது. "காமு! காமு!" என்று மனம் உருகிக் கண்ணீர் விட்டார்.
இதுவரையில் பேசா திருந்த காமுவும் தகப்பனார் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து, "அப்பா! என்னைவிட வயசான எவ்வளவோ பெண்கள் கல்யாணமில்லாமல் இருக்கிறார்கள். படித்துவிட்டுஉத்தியோகம் செய்கிறார்கள். போன வாரம் கூட கிராம ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவர் வந்திருந்தார். அந்த அம்மாளுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். கல்யாணம் ஆகவில்லையாம். நானும் ஏதாவது படித்து வேலை பார்க்கிறேனே அப்பா? இந்த ஊரிலே நமக்கு என்ன வைத்திருக்கிறது? பட்டினத்துக்குத் தான் போய் இருக்கலாமே!" என்று கேட்டாள் தகப்பனாரிடம். பிறந்தது முதல் வளர்ந்து வந்த கிராமத்தை விட்டுப் போவதற்கு வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த சுப்பரமணி, "என்னம்மா காமு! இந்த ஊரில் இருக்கிற வரைக்கும் தான் உனக்குக் கல்யாணமாகவில்லை. பட்டினம் போன பிறகாவது சீக்கிரமாக நடக்கட்டும்" என்று தன் வெள்ளை மனத்துடன் காமுவை ஆசீர்வதித்தார்.
அதற்குள் காமுவின் யோசனையை ஏற்பதென முடிவு செய்த ராமபத்திர அய்யர், "நீதான்' பார்த்துக்கொள் அப்பா பசுமாட்டை!" என்று கறவைப் பசுவைச் சுப்பரமணி யிடம் விட்டுவைத்தார். வாயில்லாத பிராணியான அதுகூட கண்களில் கண்ணீர் வழியத் தன் எஜமானரைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தது. மணம் வீசும் மல்லிகைக் கொடியும், ருசி மிகுந்த வாழை, கொய்யா மரங்களும், குளிர்ச்சி.யான கிணற்றங்கரையும், தொலைவில் சமுத்திரம் போல் தளும்பி வழியும் ஏரியும், பொன்மணி கிராமத்தின் ஜனங்களும் சேர்ந்து காமுவையும், அவள் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தார்கள். "ஆயிரம் உருண்டைகள் இருந்தாலும் விசாலம் மாமி வந்தால் நொடியில் தீர்ந்துவிடும்" என்று அப்பளக் கச்சேரிப் பெண்கள் கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்கள்.
ஓட்டு வீடானாலும் சகலவிதமான சுதந்திரத்துடனும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தெற்குப் பக்கமாக இருந்த திண்ணையில் கடுங்கோடை காலத்தில் கூட 'சில்'லென்று காற்று வீசும். ராமபத்திர அய்யர் அடிக்கடி "வடக்குப் பார்த்த அரண்மனையைவிடத் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை உயர்வு'' சொல்லி மகிழ்வார். நாள் தவறாமல் குடலை நிறையப் பூத்துக் குலுங்கும் நித்திய மல்லிகைக் கொடி தெரு பூராவும்