தாய்க்கும். மகளுக்கும் இடையில் மறுபடியும் சர்மா வந்தார். வீட்டிலே இன்னும் கொஞ்ச நாளைக்குள் ஏற்படப் போகும் புயலின் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித்திருப்ப- தாகத்தான் அவர் நினைத்தார். கையில் சதா பகவத் கீதையை வைத்துக் கொண்டு வேதாந்த விசாரணையில் அவர் மூழ்கி இருப்பதால் புயலையும், அமைதியையும், இன்பத்தையும், துன்பத்தையும், ஆசையையும், நிராசையையும், சகலத்தையும் சிருஷ்டிப்பவன் அவனே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு விடுவார் சர்மா.
மீனாட்சி அம்மாள் தன் கணவனை வெட்டும் பார்வையில் ஒரு தடவை பார்த்து விட்டு முகத்தை வேறுபுறம் திருப்பி ஒரு பெருமூச்சு விட்டாள்.
"பார்த்தீர்களா?" என்று ருக்மிணி உதடு அசங்காமல் தந்தையைப் பார்த்து சமிக்ஞை மூலம் கேட்டாள். புது நாட்டுப் பெண்ணின்மீது தங்கள் இருவரின் அபிப்பிராயமும் சரியாக இல்லை என்பதை சம்பகம் தெரிந்து கொள்ளக் கூடாதென்பது அவர்கள் தீர்மானம் . "நான் தான் முன்பே சொல்லி விட்டேனே; விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். நம் அந்தஸ்திற்குத் தகுந்த இடத்தில் சம்பந்தம் செய்ய வேண்டும் என்று? ஸ்ரீதன சொத்து லட்ச ரூபாய்க்கு இருக்கும் என்று நீதானே வாயைப் பிளந்தாய்? இந்தப் பெண்ணை "பாற்கடலிலிருந்து மகாலட்சுமியே உன் வீட்டிற்கு வந்து விட்டான்' என்றும், அந்தப் பெண் சம்பகத்தை மூதேவி என்றும் பழிக்கிறது நீதானே?" சர்மா நிதானமுள்ளவரானாலும் சமயம் அறிந்து பேசுபவர். ஒரு வார்த்தை சொன்னாலும், ஆணித்தரமாகவே பேசுவார்.
சர்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் அடிபட்ட நாகத்தின் பெருமூச்சைப் போல் 'புஸ்' என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு மீனாட்சி அம்மாள் அடுப்பங்கரைப்பக்கம் போய் விட்டாள். ருக்மிணிக்குத் தகப்பனாரின் வார்த்தை அவ்வளவாக மனத்தைப் பாதிக்கவில்ல லை. அவளுக்கு வேண்டியது பிறந்த வீட்டின் உபசாரங்கள்தானே? அது இன்றளவும் குறையாமல் இருக்கும் போது அவளுக்கு வேறு விஷயங்களைப் பற்றி என்ன அக்கறை?
மீனாட்சி அம்மாளின் மனோபாவம் புது நாட்டுப் பெண்ணிடமும் சரியாக இல்லை என்பதைச் சம்பகம் புரிந்து கொண்டாள். நீலாவின் போக்கு அவ்வளவு நல்லதாக அவள் மனத்திற்குத் தோன்றாவிட்டாலும், மாமியாரிடம் அவள் நடந்து கொள்ளும் முறை சம்பகத்தின் மனப்