கூறிவிட்டு மீனாட்சி உள்ளே எழுந்து போய் விட்டாள்.
சங்கரனுக்கு ஏற்கெனவே தலையை வலித்துக் கொண்டிருந்தது. பணக்கார வீட்டுப் பெண் என்கிற அகம்பாவத்தைச் நீலா சில காலமாகவே கணவனிடம் காட்டத் தொடங்கி இருந்தாள். இன்று தன் தாயையும் அவள் உதாசீனமாகப் பேசிவிட்டுப் போயிருந்தது வேறு அவன் கோபத்தை அதிகமாக்கி விட்டது.
மணி ஏழு, எட்டு என்று கடிகாரத்தில் ஆகிக் கொண் டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அன்று எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டு விட்டார்கள். சமையற்கார மாமியிடம் மீனாட்சி, நீலாவின் சாப்பாட்டை சாப்பிடும் கூடத்தில் ஒரு மூலையில் வைத்து விட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டாள், அந்த வீட்டில் தினம் யாராவது சினிமாவுக்கோ, நாடகத்துக்கோ கண்காட்சிக்கோ போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து சாப்பிடுவார்கள். சமையற்கார மாமி காத்திருந்து உணவு பரிமாறுவாள். இன்று நீலாவை அவமதிக்க வேண்டும் என்று மீனாட்சி அம்மாள் இந்த உத்தரவை சமையற்காரிக்கு இட்டாள்.
கோடை காலமாதலால் வெப்பம் அதிகமாக இருக்கவே சம்பகம் பானுவை வைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தாள். மல்லிகைப் பந்தலிலிருந்து 'கம்'மென்று வாசனை வீசியது. வெள்ளை வெளேர் என்று மலர்ந்திருந்த மல்லி மலர்கள் நிலவொளியில். வெள்ளி மலர்களைப் போல் பிரகாசித்தன. வானவெளியில் சந்திரன் ஊர்ந்து செல்வதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்பகம். தொலைவில், ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் கணவனை நினைத்து ஏங்கியது. அவள் மனம்! 'உலகத்துக்குப் பொதுவாக ஒளிவீசும் சந்திரன், தன் துயரை தன் மனக்கசப்பை அங்கு களிப்புடன் வாழும் கணவனிடம் கூறுவானோ?' என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். கவலையால் முகம் வாடி இருந்தாலும், களை நிறைந்த அந்த முகம் பார்ப்பதற்கு இனிமையாகத் தான் இருந்தது.
தாயின் சிந்தனையைக் கவனித்த பானு,"அம்மா!நான் உன்னைப் போல் இருக்கிறேனா?" அப்பாவைப் போல் இருக்கிறேனா?" என்று கேட்டாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆக ஆகக் கேள்விகளும் பிரமாதமாக இருந்தன. பானு அநேகமாகத் தாயைப் போலத்தான் இருந்தாள். ஆனால் நீண்டு தடித்த இமைகளுடன் இருக்கும் கண்கள் அவள் தகப்பனாரைப் போல் இருந்தன. சதா துயிலில் ஆழ்ந்த தோற்றமளிப்பவை. "கண்களும், புருவங்களும் அவரைப்