(Reading time: 20 - 39 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

பிறகு, "இந்தாடி அம்மா! எங்காவது போகிறதானால் முன்னாடியே அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடு. இல்லா விட்டால் ஒரு கடுதாசியானாலும் எழுதி வைத்து விட்டுப் போ. இந்த மாதிரியெல்லாம் சட்டை பண்ணாமல் இருந்தால் அவனுக்கும் பிடிக்காது எனக்கும் பிடிக்காது!' என்றாள்.

   

"வெளியில் போகக் கூட சுதந்திரமில்லையா என்ன எனக்கு? நீங்கள் தான் கர்னாடகம். அவர் கூடவா படிக்க வில்லை?" என்று கேட்டு விட்டு நீலா, பிறந்தகத்தில் அவளுக்கு ஸ்ரீதனமாகக் கொடுத்திருந்த காரில் கொண்டு புறப்பட்டாள்.

   

'நீங்கள் தான் கர்னாடகம், அவர் கூடவா படிக்க வில்லை' என்று அவள் கேட்ட வார்த்தைகள் மீனாட்சியின் மனத்தில் சுருக்கென்று குத்தின. 'கர்னாடகமா? வீட்டை வாசலைக் கவனித்து, கணவ்னுக்குப் பணிவிடை செய்வது கர்னாடகமா? தான் பெற்ற குழந்தைகளைச் சீராட்டி வளர்ப்பது கர்னாடகமா? தன்னைவிட நீலா எந்த விதத்தில் உயர்ந்தவள்? சர்மாவுக்கும், தனக்கும் பல விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சர்மாவைக் கேட்காமல் தான் ஒன்றும் செய்வதில்லையே! குடும்ப விஷயங்களில் எவ்வளவு தான் சச்சரவு ஏற்பட்டாலும் பிறத்தியார் பார்த்துச் சிரிக்கும்படி தான் ஒரு போதும் கணவனைத் தாழ்வு படுத்தியதில்லை. இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே, கோபம் நிறைந்த கண்களுடன் மீனாட்சி திரும்பிப் பார்த்ததும் அவள் எதிரில், சம்பகம் தான் காணப் பட்டாள்.

   

"நான் கர்னாடகமாம். இவள் நாகரிகமாம். கேட்டயாடி சம்பகம்? நீயும் இந்த வீட்டுக்கு வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆயிற்றே? உன்னை எத்தனை சொல்லி இருப்பேன்? உன் வாயில் அந்த மாதிரி வார்த்தை இது வரையில் வந்தது உண்டா?" என்று தன் மனத்திலிருந்த ஆத்திரம் பூராவையும் கொட்டித் தீர்த்தாள் மீனாட்சி.

   

"சிறிசு அம்மா. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்” என்று சம்பகம் கூறியதும், 'சிறிசா? இந்த நாளில் கல்யாணமாகிற போதே இருபது வயசு ஆகிவிடுகிறதே! சிறிசாம் சிறிசு! பத்தா பன்னிரண்டா வயசு?" என்று அவள் பேரில் சீறி விழுந்து விட்டு கூடத்துக்குப்போய் விட்டாள் மீனாட்சி.

   

----

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.