Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 02 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : மங்களபுரியில் வேறொரு வீதி.
பொழுது : மறுநாள் பகல்.
முன்னால் ஒருவன் ஓடி வருகிறான்; பின்புறம் சற்று தூரத்தில், ”உடாதே! உடாதே அதோ ஓட்றான்! அதோ ஓட்றான்! அடே சூதாடிப் பயலே! எங்கே ஓட்றே? நீ அந்த எம லோகத்துக்கு போனாலும் ஒன்னை உட மாட்டோம். அடே மகிபாலா! நீ இந்த முண்டங்கிட்ட தப்பற தேதுடா; நில்லுடா நில்லுடா!” என்று ஒரு கூச்சல் கேட்கிறது.
மகிபாலன் : (தனக்குள்) ஆகா இந்தப் பாழும் சூதாட்டத்தில் எனக்கு என்ன இவ்வளவு பைத்தியம்! இந்தக் கெட்ட புத்தி எப்பொழுதுதான் என்னை விட்டு விலகுமோ தெரியவில்லையே! கையில் பணமில்லா விட்டால் கடனாவது வாங்கி ஆடும்படி மனது தூண்டுகிறதே. சூதாட்டத்தில் உட்கார்ந்தால், சோறு வேண்டாம்; நீரும் வேண்டாம், வீடு, பெண்சாதி, பிள்ளைகள் முதலிய எல்லா ஞாபகமும் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. நான் இவர்களிடத்தில் சூதாடக் கடன் வாங்கிய 10 ரூபாயையும் திரும்பிக் கொடுக்கும்படி என்னை அடித்து உபத்திரவிக்கிறார்களே! நான் என்ன செய்வேன்! என்னிடத்தில் இப்பொழுது ஒரு செப்புக் காசும் இல்லையே! இந்த இரண்டு நாய்களும் இப்பொழுது என் உயிரை வாங்கி விடும் போல் இருக்கிறதே! ஐயோ! அதோ வந்து விட்டார்களே! அடுத்த க்ஷணத்தில் என்னைப் பிடித்துக் கொள்வார்களே (நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்) நல்ல வேளையாக இதோ ஒரு பாழுங் கோவில் இருக்கிறது! இதற்குள் ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன். (பின்புறமாக நடந்து கோவிலுக்குள் நுழைந்து கொள்கிறான்.)
(முண்டன் திண்டன் என்னும் இரண்டு சூதாடிகள் ஒடி வருகிறார்கள்.)
முண் : உடாதே! உடாதே புடிச்சுக்கிங்க! புடிச்சுக்கிங்க!
திண்: அடே! நீ அந்தச் சாச்சாத் கடவுளுக்கிட்டப் போயி ஒளிச்சுக்கினாக்கூட ஒன்னை உடப் போவதில்லையடா! அடே அண்ணே! காலடியைப் பாருடா! கோணக் கோணலா இக்குதுடா!
முண் : என்னாத்துனாலே அப்படி இக்குதுன்னு ஒனக்கு அம்புட்டு ரோசனை புரியல்லே