பாத்தியா பயத்துனாலேடா அது அவன் ஒடம்பு நடுக்க மெடுத்துக்கிச்சு! காலு தாறு மாறாய்ப் போயிக் கெடக்குதுடா!
திண் : காலடி இத்தோடே நின்னு போச்சே! இதென்னடா ஒவித்திரியம்! எங்கிட்டோ மாயமாப் பறந்து பூட்டாண்டா சனியம் புடிச்சவன்.
முண்: காலடியைத் திருப்பி வச்சுக்கிறாண்டா! என்னா சாமார்த்தியமுண்டா பயமவனுக்கு! முதுவுப் பக்கமா திருப்பிக்கினு கோயிலுக்குள்ளற போயிருக்கிறாண்டா என்னை ரோசனைடா இவனுக்கு கோயிலுக்குள்ளற நாம்ப வரமாட்டோமுன்னு நெனெச்சுக் கினாண்டா இவன்! வாடா உள்ளற போயிக் கோளிக் குஞ்சேப் பிராந்து அமுக்கறாப்லே குபீருன்னு புடிச்சுக்கலாம். (உள்ளே போகிறார்கள்.)
மகிபாலன் : (தனக்குள்) இவர்கள் இங்கேயும் வருகிறார்களே என்ன செய்கிறது? இங்கு அதிகமாய் வெளிச்சம் இல்லாமல் மங்கலாக இருக்கிறது. நான் ஒரு கல் விக்கிரகத்தைப் போல அசையாமல் நிற்கிறேன். இருவர்கள் என்னை விக்கிரக மென்று நினைத்துக் கொண்டு போய் விடுவார்கள்.
(அப்படியே நிற்கிறான்; உள்ளே வந்த அவ்விருவரும் அவனைக் கண்டு பரிகாசமாகத் தமக்குள் சைகை செய்து கொள்கிறார்கள்.) .
முண் : அடே திண்டா! அந்தாலே சாமி இக்குது பாத்தியாடா மனிசனெப் போல இக்குதுறா!
திண் : சாமி எம்பிட்டுப் பெரிசுடா! அண்ணே! அது மரத்துலே செஞ்சதுறா!
திண்: (மகிபாலனை அசைத்த வண்ணம்) இல்லேடா இது கல்லு மாதிரி இக்குதுறா! ரவையுண்டு கிள்ளிப் பாக்கிறேண்டா.
(கிள்ளுகிறான்.)
திண் : எல்லாக் கோயில்லெயும் சாமி கல்லுலேயும் மண்லேயுங் கட்டேலெயுந் தாண்டா இக்குது! அடிச்சா அளத் தெரியாதுறா. இந்தச் சாமி உயிருள்ள சாமி மாதிரி புச்சா இருக்கு.