மகி : (முண்டனைத் தனியாக அழைத்துப் போய்) அடே! ஒரு உபகாரம் செய். என்னிடத்தில் சிறிய நகை ஒன்றிருக்கிறது. அது பாதிக் கடனுக்குத்தான் சரியாகும். அதைக் கொடுக்கிறேன். இன்னொரு பாதிக் கடனை மன்னித்து விடுகிறாயா?
முண் : சரி! அப்படியே ஆவட்டும் கொண்டா நவையெ.
மகி : (முண்டனைப் பார்த்து உரக்க) நீபாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறது நிச்சயந்தானே?
முண் ; நிச்சியந்தான்.
மகி : (திண்டனைப் பார்த்து உரக்க) உனக்கும் சம்மதந்தானே! நீயும் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறாயா?
திண் : சரி.
மகி : சந்தோஷம்! இப்படி யார் உதவி செய்யப் போகிறார்கள்! நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவர்கள். இந்த உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்.)
முண் : எங்கிட்டு வேகமாப் போறே? நில்றா நில்லு.
மகி: ஏன் ஐயா! நிற்கச் சொல்லுகிறாய்? நீ பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தாய்; திண்டன் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தான். கடன் முழுதும் தீர்ந்து போய் விட்டது. நான் போகிறேன். என்னை ஏன் திரும்பவும் வதைக்கிறீர்கள்?
முண் : சவாசப்பா! அடே! என்னெ யாருன்னு பாத்துக் கிட்டே; ஒன் சூச்சமெல்லாம் எங்கிட்டச் செல்லாது. எனக்குக் காதா குத்ரே? என் காதைப் பாத்தியா எம்பிட்டுப் பெரிய தொளே மின்னயே குத்தியாச்சுடா பூராப் பணத்தியும் கீளே வச்சுப்பிட்டு அந்தாண்டே போ. அதுக்கு மின்னே அப்பாலே இப்பாலே நகந்தின்னா முட்டியைப் பேத்துப்புடுவேன் சாக்கிறதே.