Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 01 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம்: மங்களபுரியில் ஒரு வீதி.
மாதவராயருடைய மாளிகை எதிரில் காணப்படுகின்றது.
பொழுது இரவு ஏழரை மணி சமயம்.
ஸோமேசன் : (மாதவராயருடைய மாளிகையின் வாசலில் நின்று கொண்டு தனக்குள்)
ஸோமேசா! நீ எவ்வளவு கேவல நிலைமைக்கு வந்துவிட்டாய் மாதவராயர் பெருத்த தனவந்தராய் இருந்த காலத்தில் நீ எப்படி இருந்தாய்! ஆகா! என்ன போஜனம் என்ன பரிபக்குவ பதார்த்தங்கள்! என்ன உபசரணை! என்ன தாம்பூலம்! இந்த மாளிகைக்கு வரும் விருந்தினர் எத்தனை பேர் எல்லாம் கனவோ நினைவோவென்று நினைக்கும்படி ஒழிந்து போய்விட்டனவே! நான் கோயிற் காளையைப் போல, மூக்கின் வழியாக நெய்யும், பருக்கையும் வரும் வரையில் உண்டு, மதோன்மத்தனாய் இந்தத் திண்ணையில் உள்ள திண்டில் ஒய்யாரமாய் சாய்ந்தும் படுத்தும் புரண்டிருந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ? அப்பொழுது எனக்கு என்ன குறைவாயிருந்தது? பசியும் மனக் குறையுமே குறைவாய் இருந்தன. இப்பொழுது என் கதி எப்படி இருக்கிறது? ஒரு நெல் எவ்விடத்தில் அகப்படுமோ என்று நாள் முழுதும் அலைந்து திரியும் பறவையைப் போல, எவன் போஜனத்திற்கு அழைப்பான். எப்படி ஒரு வேளை கழியும் என்பதே நினைவாகவும், பசியே நீங்காத் துணைவனாகவும் பெற்று வருந்தி அலைகிறேன். என்ன செய்கிறது எல்லாம் கால வித்தியாசம் என்னுடைய ஆப்தமித்திரராகிய மாதவராயருடைய செல்வம் எல்லாம் எவ்விதம் குறைந்த போதிலும், அவரிடத்தில் எனக்குள்ள அன்பும், ஆசையும் நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன எந்நன்றி கொன்றவர்க்கும் உய்யும் வழி உண்டு. செய்ந் நன்றி கொன்ற அந்தப் பாவத்தைத் தொலைப்பதற்கு வழி ஏது? என் நண்பரிடத்தில் போய் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறேன். அவர் குடும்ப தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் சமயமாய் இருக்கலாம் (உள்ளே நுழைகின்றான்),
(மாதவராயரும், கோமளவும் பூஜைத்தட்டு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வருகின்றனர்).