ஸோமே: ஆக்ஞை, (உட்காருகிறான். மாதவராயர் ஏதோ யோசனை செய்கிறார்) என்ன யோசனை செய்கிறீர்கள்?
மாத: மித்திரா!
விருத்தம் : சங்கராபரணம்
என்னென வுரைப்பே னன்பா! இன்மையின் கொடுமைதன்னை
முன்னுள புகழை நட்பை மொழிகளின் மதிப்பை நீக்கும்
உன்னினு முடலைத் தீய்க்கு மொண்மையு மிளமை போக்கும்
அன்னையும் பகைமை கொள்ளும்; அலகிலாச் சிறுமை நல்கும்.
துக்கத்தை அடுத்தாற்போலத் தொடர்ந்து வரும் சந்தோஷம், இரவிற்குப் பின் சூரியப் பிரகாசம் உண்டாகி அதை ஓட்டுவதைப் போல் இருக்கிறது. ஆனால், செல்வத்தில் இருந்து தரித்திர நிலைமையை அடைபவன், பார்வைக்கு மனிதனைப் போல் இருந்த போதிலும் அவன் நடைப் பிணமே ஒழிய வேறில்லை. இந்நிலைமையைக் காட்டிலும் கொடியது வேறு என்ன இருக்கிறது!
ஸோமே : அப்படியானால் தரித்திர நிலைமையில் இருப்பவர்கள் யாவரும் உயிரை விட்டு விட வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்?
மாத: என் விருப்பத்தின்படிக் காரியம் நடப்பதாய் இருந்தால், இவ்விதம் உயிர் வாழ்தலைக் காட்டிலும், உயிரைத் துறப்பதையே உத்தமமாகக் கொள்வேன். பிராணனை விடுவது சொற்பக் கஷ்டமேயாகும். தரித்திரனாய் இருப்பது ஆயுட்காலம் முழுதும் ஒழியா வேதனையைத் தரக் கூடியதல்லவோ