வஸந்தஸேனை : (தனக்குள்) ஐயோ! இப்படி எவ்வளவு துரந்தான் ஓடுவேன். இந்தச் சண்டாளர்கள் விடாமல் துரத்திக் கொண்டு வருகிறார்களே! என்னுடன் ஓடி வந்த பணிப் பெண்களைக் கூடக் காணேனே! அடி மல்லிகா! அடி வத்சலா! எங்கே போய் விட்டீர்கள்? நான் இதோ இருக்கின்றேன்; ஒடி வாருங்கள்; ஒடி வாருங்கள்.
வீர : அடே நண்பா அவள் யாரோ ஆட்களை உதவிக்கு அழைக்கிறாள்! நாம் என்னடா செய்கிறது?
தோழ : பயப்பட வேண்டாம். நானிருக்கிறேன்.
வஸ : அடி மல்லிகா! எங்கே மாயமாய் மறைந்து விட்டீர்கள்?
தோழ : நல்ல புத்திசாலி! தன் பணிப்பெண்களை யல்லவா கூப்பிடுகிறாள்.
வீர : அப்படியா! நல்லவேளை தான்; நான் நூறு மனிதரை அடிக்கக் கூடிய வீரன் அல்லவா? அதனால் தானே நான் பிறந்த பொழுதே எனக்கு வீரஸேனன் என்று பெயர் கொடுத்தார்கள். இந்த ஸ்திரீகள் என்னை என்ன செய்யக் கூடும்? வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்.
வஸ : (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயோ! என் பணிப் பெண்களில் ஒருத்தியாயினும் வரக் காணேனே என் செய்வேன்! இன்னமும் ஓடித்தான் தப்ப வேண்டும். (ஓடுகிறாள்.)
வீர : நீ எங்கு ஓடினாலும் உன்னை நான் விடப் போகிறதில்லை.
வஸ : பெரிய மனிதர்களே! நான் சக்தி இல்லாத அபலை ஸ்திரீ என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்கள்?
வீர : உன்னை நான் கொல்ல நினைக்கவில்லை. சுகமாய் என்னுடன் வாழலாம். ஏன் பயந்து ஓடுகிறாய்?
தோழ : ஓடுவது உன்னுடைய குற்றமல்லவா? உன்னை நாங்கள் ஓடச் சொன்னோமா?