மாத : அப்பா ஸோமேசா தெய்வங்களைத் தூஷிக்காதே! நமக்குத் துன்பம் உண்டாவதற்கு நாமே காரணமின்றி அது தெய்வத்தின் குற்றமன்று. நாம் நன்மை செய்தால் நன்மையைப் பெறுகிறோம். தீமை செய்தால் தீமையையே கைம்மாறாய்ப் பெறுகிறோம். தெய்வத்தை ஆராதிப்பது வீணாகுமென்று நினையாதே. மாரடித்த கூலி மடிமேலே என்பார்களே அவ்விதம் இதில் நாம் உடனே பலனை விரும்பலாமோ? அரசன் அன்று தரும்! தெய்வம் நின்று தரும். நமக்கு எது நன்மையோ அது கடவுளுக்கு நன்றாய்த் தெரியும். அவர் அதை அவசியம் செய்வார். நேரமாகிறது. இருள் அதிகமாகச் சூழ்கிறது. சீக்கிரம் போய் விட்டு வந்து விடு.
ஸோமே : இந்த இருளில் வெளியில் போக எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஊரில் துஷ்டர்களும், துன்மார்க்கர்களும், திருடர்களும் அதிகரித்து விட்டனர். இப்பொழுது அவர்கள் அலைந்து திரியும் சமயம். நான் இந்த இருளில் வெளியில் போவேனாகில் தேரைக்காகக் காத்துக் கொண்டிருந்த பாம்பின் வாயில் வந்து விழுந்த சுண்டெலியைப் போல நான் துன்பப்பட வேண்டி வரும்.
மாத : சரி. அப்படியானால் கொஞ்ச நேரம் உட்கார் ஜெபம் செய்து விட்டு நானும் வருகிறேன். இரண்டு பேருமாய்ப் போகலாம்.
ஸோமே : அப்படியே!
(இருவரும் ஒரு பக்கமாய் போகிறார்கள்.)
(அந்தத் தெருவில் வஸந்தஸேனை முன்னால் ஓடி வர, அவளைத் துரத்தியவண்ணம் வீரஸேனனும், அவன் தோழனும் சேவகனும் வருகின்றனர்.)
வீர: அடி வஸந்தஸேனை! ஓடாதே! நில் நில்.
தோழ: வஸந்தஸேனை ஏன் இந்தப் பாடுபட்டு ஓடுகிறாய்! இப்படி ஓட உனக்கு நாணம் இல்லையா? பரத நாட்டியத்தில் அழகாய் உபயோகப்படுத்த வேண்டிய உன்னுடைய பாதங்களை ஏன் இப்படி வதைத்துக் கொள்கிறாய்? வேடனால் துரத்தப்படும் மான்