(Reading time: 31 - 62 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

விசனம் நெருப்பைப் போல என் மனத்தை வேக வைத்து என்னை வதைக்கிறதே ஒழிய, என் தேகத்தை எரித்துச் சாம்பலாக்காமல் இருக்கிறதே! சே! தரித்திரக் கொடுமையினும் கொடிது வேறொன்றுமே இல்லை. நம்மிடத்தில் பரம ப்ரீதி கொண்டவர்களைப் போல் நடித்தவர்கள் எல்லோரும் இப்பொழுது நம்மை அவமதித்து ஏளனம் செய்வதைக் காண, மனிதனுக்கு உண்மையில் ஒரு யோக்கியதையும் இல்லை என்பதும், பெருமையும் சிறுமையும் செல்வத்தினாலேயே ஏற்படுகிறது என்பதும் நன்றாய் விளங்குகிறது. மனிதர்களுடைய குணம் எப்படி இருக்கிறது? ஒருவன் தனவந்தனாய் இருந்தால் அவனைப் பார்த்துப் பிறர் பொறாமை அடைந்து வயிற்றெரிச்சல் கொள்வது; அவன் ஏழையாய் விட்டால் அவனைப் பார்த்து ஏளனம் செய்வது. அதிருக்கட்டும், தயவு செய்து இந்தப் பலி பிண்டத்தை எடுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் வைத்து விட்டு வா.

   

ஸோமே : ஸ்வாமி! நான் போக மாட்டேன்.

   

மாத: (புன்சிரிப்புடன்) ஒரு நாளும் இப்படிச் சொல்ல மாட்டாயே! இன்றைய தினம் ஏன் இப்படிச் சொல்லுகிறாய்?

   

ஸோமே :

   

இல்லையோ புவியில் தெய்வ மிதுவரை நீவிர் பாழுங்

   

கல்லையோ தொழுதீர்? செய்த காரியம் விழலுக் கீத்த

   

தில்லையோ? கடவுள் செய்தி யிங்ஙணமாக, மாந்தர்

   

புல்லியோ ராதல் சாலப் புதுமையோ! விடுப்பீர் யாவும்

   

இதனால் என்ன பலன். நீங்கள் எவ்வளவோ காலமாகத் தெய்வங்களை ஆராதனை செய்து கொண்டிருக்கிறீர்களே, அவைகள் உங்களுக்கு என்ன நன்மை செய்தன? மனிதருக்கு நன்றி இல்லையென்று சொன்னோமே. தெய்வங்களுக்கே நன்றி இல்லாத பொழுது, மனிதர் விஷயம் ஒரு பொருட்டா? தெய்வங்களை ஆராதிப்பது விழலுக்கு இறைத்த நீரே ஒழிய வேறு இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.