ஸோமே : ஸ்வாமீ!
விருத்தம்: தோடி
உயிரினு மரிய நண்பீர்! உருகிநீர் வானங் காணாப்
பயிரினு மதிகம் வாடிப் பரிபவ முறுத லென்னோ?
செயிரினை யடையா நன்மைச் செல்வமே நிதிக்கு மேலாம்;
துயரினை விடுப்பீர் கானத் துடித்தனே னினிய அன்பீர்!
நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் ஏழ்மை நிலைமையை அடைந்ததினாலேயே உங்களுக்குத் தாழ்மையும் இகழ்ச்சியும் உண்டாய் விடுமோ? நண்பர்களுக்கும் இல்லை என்று வந்த யாசகர்களுக்கும் வாறி வாறிக் கொடுத்து, ஐசுவரியத்தை எல்லாம் இழந்ததினால் உங்களுடைய கீர்த்தி அதிகரித்ததே ஒழிய அதனால் உங்களுக்கு யாதொரு மானஹானியும் உண்டாக வில்லை. சந்திரன் தேய்ந்து, தேய்ந்து, அற்பத்திலும் அற்பமாய்த் தோன்றும் சமயமாகி மூன்றாம் பிறையில்தானே அது மிகவும் நேத்திரானந்தமாய்க் காணப்படுகிறது.
மாத: நண்பா என்னுடைய சொந்த உபயோகத்திற்கு ஐசுவரியம் இல்லை என்று நான் சிறிதும் விசனிக்கவில்லை.
விருத்தம்: மோகனம்
கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற் றமுதளிக்கு மெய்யன்-உருப்பெற்றால்
ஊடடி வளர்க்கானோ? ஓகெடுவா யன்னாய்! கேள்