நாற்புறங்களையும் பார்த்துப் பயந்து மருண்டு ஓடுவதைப் போலச் செல்கின்றாயே! நில் நில்! பயப்படாதே.
வீர : ஆஹா ஒவ்வொரு அடியிலும் தடுமாறி விழுகிறாயே! ஐயோ பாவம்! ஏன் உனக்கு இவ்வளவு சிரமம்? நான் பேயா? பூதமா? என்னைக் கண்டு ஏன் இவ்விதம் அஞ்சியோட வேண்டும். நான் உன்னைத் தின்று விடுவேனா? உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் அல்லவோ இவ்விதம் வருகிறேன். உன் நினைவினால் என் மனம் தணலாய் எரிய, அனலில் இடப் பட்ட புலாலைப் போல என்தேகம் முழுதும் கருகுகிறதே! அடி வஸந்தஸேனா ஓடினது போதும். நில்! நில்!
சேவன் : அடியாத்தே! என்னமா ஓடியாறாங்கறேன் பய மவ! ஏகுட்டி! எம்பிட்டு துரந்தான் ஓடினே! ஒன்னை உட்டுடுவாங்கன்னு நெனைக்காதே! ஏன் சொம்மா ஓட்றே நில்லு! நில்லு! வீணாக் கெட்டுப் போவாதே!
வீர: அடி சுந்தரி இப்படி ஓடினால் புஷ்பத்திலும் மெல்லிய உன்னுடைய பாதங்கள் எப்படி வருந்தா! உன்னையே நினைந்து உருகும் காதலை வெறுத்து விலக்கி ஏன் இப்படி ஓடுகிறாய்? பகலிலோ எனக்கு நித்திரையே இல்லாமற் செய்து விட்டாய். இரவிலோ என் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்கிறாய். என்றைக்கும் உன் தந்திரம் பலிக்கும் என்று நினைக்காதே! என்னிடத்தில் நீ ஒருகாலும் தப்ப மாட்டாய். இராவணன் கையில் திரெளபதி அகப்பட்டுக் கொண்டது போல நீ எப்படியும் என்னிடத்தில் அகப்பட்டுக் கொள்வாய். ஏன் வீண் முயற்சி செய்கிறாய்?
தோழ : கருடனைக் கண்ட நாகம் ஓடி ஒளிவதைப் போல இப்படி ஏன் பெருத்த அச்சத்தை அடைய வேண்டும்? கரும்புத் தின்னக் கூலி கேட்பாரும் உண்டோ? இராஜாவின் மைத்துனர் இச்சிக்கும் பாக்கியம் யாருக்காயினும் எளிதில் கிடைக்கக் கூடியதா? உனக்கு என்ன பைத்தியமா? நீ படித்தவள் அல்லவா? நன்றாய் யோசித்துப் பார் ஓடினது போதும்.
வீர : கீசகனைக் கண்டு சாவித்ரி ஒடுவதைப் போல நீ எவ்வளவுதான் ஓடிய போதிலும் சுபத்திரா தேவியின் பேரில் அநுமான் பாய்ந்து பிடித்துக் கொண்டதைப் போல நான் உன்னை இதோ பிடித்துக் கொள்கிறேன் பார்.