வஸ : (தனக்குள்) என்ன நற்குணமப்பா! இவர்களுடைய உபசார வார்த்தைகளே இவ்வளவு பயங்கரமாய் இருக்கின்றனவே! இவர்களுக்குக் கோபம் வந்தால் அது எப்படி இருக்குமோ? (அவர்களை நோக்கி) ஐயா! உங்களை வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு என்னுடைய ஆபரணங்கள் தேவையானால் இதோ யாவற்றையும் கொடுத்து விடுகிறேன். வாங்கிக் கொண்டு போங்கள்.
தோழ : சே! உன்னுடைய ஆபரணங்கள் எங்களுக்கு எதற்காக வேண்டும்? பூங்கொடியில் அழகாய் மலர்ந்திருக்கும் புஷ்பங்களை அழகின் மகிமையை அறியாத மூடர்கள் அல்லவோ பறிப்பார்கள்.
வஸ : அப்படியானால் உங்களுடைய தேவைதான் என்ன?
வீர : பேஷ் வழிக்கு வந்தாயா சரி. இதோ பார், நான் யாரைப் போல் இருக்கிறேன்? அந்த மன்மதனும் அழகில் எனக்கு இணையாக மாட்டான். அவ்வளவு மேன்மை பொருந்திய நான் உன்னுடைய பிரியத்தைத்தான் வேண்டுகிறேன்.
வஸ : அழகு! அழகு போதும், நில்லுங்கள். இது வீண் பேச்சு ஒரு நாளும் என்னிடத்தில் செல்லாது.
தோழ : அடி வஸந்தஸேனை நீ உன்னுடைய ஜாதிக் கிரமத்திற்கு விரோதமாக நடக்கிறாயே! வேசியின் வீடு பால்யர்களுக்குப் புகலிடம் அல்லவோ நீங்கள் பாட்டைக்கு அருகில் படரும் கொடிக்குச் சமானமானவர்கள் உங்களுடைய தேகமும், பிரியமும் விலைக்கு அகப்படக் கூடிய பொருள்கள் அல்லவோ? நீங்கள் சந்நியாசியையும், பைத்தியக்காரனையும், பிராம்மணனையும், பறையனையும், அழகுடையவனையும், குரூபியையும், சிறுவனையும், கிழவனையும் ஒரே விதமான ஆசையோடு விரும்பக் கூடியவர்கள் ஆயிற்றே! அப்படி இருக்க நீ அன்னிய புருஷர் முகம் பாராத குல ஸ்தீரியைப் போலவும், படி தாண்டாப் பத்தினியைப் போலவும் ஆண் வாடை அடிக்கக் கூடாதென்று ஒடுகிறாயே!
வஸ: ஐயா! நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஸ்திரீயினுடைய