பிரியத்தை யோக்கியதையினால் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய மிருகத்தின் முரட்டுத் தன்மையை உபயோகித்துப் பெற முடியுமா?
வீர : அடே உண்மை இன்னதென்று நீ அறிந்து கொள்ளவில்லை. இந்த வேசி நித்திய தரித்திரனாகிய மாதவராயன் பேரில் மோகம் கொண்டிருக்கிறாள் என்று நான் கேள்விப் பட்டேன். அவனுடைய வீடு இதோ சமீபத்தில் இருக்கிறது. அதனாலே தான் இவ்வளவு தைரியமாய்ப் பேசுகிறாள். தப்பித்துக் கொண்டு இந்த வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போகிறாள்; ஜாக்கிரதை.
தோழ : (தனக்குள்) மூடர்களில் இவனுக்குத்தான் முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். அவளுக்குத் தப்பிப் போகும் வழியை இவனே சொல்லிக் கொடுக்கிறான்.
வஸ : (தனக்குள்) ஆஹா! அப்படியா என் துரை மாதவராயருடைய மாளிகை இதுவா? அவரை நான் சந்திக்கும்படி இவர்கள் செய்ததும் நன்மை தான். இந்த மாளிகைக்குள் போகிறேன்.
வீர : அடே நண்பா எங்கே அவளைக் காணோமே? இந்த இருளில் எப்படி அவளை அடையாளங் கண்டுபிடிக்கப் போகிறோம்?
தோழ : அவளுடைய ஆபரணங்கள் கலீர் கலீரென்று ஒலிப்பதினாலும், அவளுடைய உடம்பில் அணிந்து கொண்டிருக்கும் பரிமள கந்தம், புஷ்பம் முதலியவற்றின் வாசனையினாலும் அறிந்து கொள்ளலாம்.
வீர : அவளுடைய புஷ்பமாலையின் வாசனையை மாத்திரம் இந்த இருளில் என் நாசி முகருகிறது! ஆபரணங்களின் ஒளி கண்ணிற்குப் புலப்படவில்லையே! எங்கு போய் விட்டாளோ தெரியவில்லையே. அவளை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்?
வஸ : ஆஹா அப்படியா என்னுடைய மாலையைக் கழற்றி எறிந்து விடுகிறேன். சப்திக்கும் ஆபரணங்களையும் வாங்கிக் கையில் வைத்துக் கொள்கிறேன். அதுதான் மாளிகையின் கதவு. (கதவைக் கையால் தடவிப் பார்க்கிறாள்.) கதவு சாத்தப் பட்டிருக்கிறதே! என்ன செய்யப் போகிறேன் வேறு ஏதாவது வாசலில் இருக்கிறதோ பார்க்கிறேன்.