தேவாரம்: தேசிகதோடி - ரூபகம்
மாத :
(1) வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழற்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்டனே!
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதிட்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே!
(2) பட்டிசைந்த மேனியாள் பாவையாளோர் பாகமா
யொட்டிசைந்த தன்றியும் முச்சியா ளொருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய்க் கூடலால வாயிலா
யெட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையோ!
மாத: (பெருமூச்சுவிட்டு) ஆகா! என்ன காலவித்தியாசம்! என்னுடைய உன்னத திசையில் நான் கொடுத்த பலி பிண்டத்தை எத்தனையோ காகங்களும், அன்னங்களும், மற்றப் பறவைகளும் என் மாளிகை வாசலில் வந்து நிறைந்து வாறிக் கொண்டு போய்க் குதுகலமாகத் தின்றன. இப்பொழுது நான் அர்ப்பணம் செய்வது புல்லில் இருக்கும் எறும்புகளுக்கும் போதாமல் அவ்வளவு அற்பமாய்ப் போய்விட்டதே! ஈசுவரா இதுவும் உன் அருளோ (கீழே உட்காருகிறார்)
ஸோமே : ஸ்வாமி! நமஸ்காரம்!
மாத: மங்களம் உண்டாகட்டும். மித்திர ரத்தினமே! வா; உட்கார்.