முண் : ஆமுண்டா! இந்தச் சாமிக்கு புதுமாதிரிச் பூசெ, நிமித்தியம் எல்லா பண்ணணும்டா. இந்தச் சாமிக்கு அடிச்சா அளத் தெரியுமான்னு பாக்கறேண்டா. (முதுகில் ஓங்கி அடிக்கிறான்.
திண் : சாமி அளுவல்லெடா! நல்ல சாமிடா பொறுமைப் பொறுத்தவருடா; பூலோவம் ஆண்டவருடா! தப்புதம்! தப்புதம்! சாமி ஒன்னே அடிச்சேன்னு கோவிச்சுக்காதே! கன்னத்திலே போட்டுக்றேன். (மகிபாலனுடைய இரு கன்னங்களிலும் அடிக்கிறான்.)
முண் : அதெல்லாம் இக்கட்டும். நாம்ப ரெண்டு பேரும் இந்த உயிருச்சாமிக்கு மின்னாலே சூதாடலாம் வா! சாமி எங்கப்பன் நம்ப தகராரைத் தீப்பாரு.
திண் : சரி ஒக்காரு; ஒனக்காச்சு எனக்காச்சு! ஒரு கை பார்க்கலாம்; சாமிகூட கொஞ்சூண்டு கண்ணைத் தொறந்து அதோ என்னெப் பாக்குதுடா!
முண் : சாமி என்னெப் பாக்க மாட்டேங்குதே! இந்தச் சாமிக்குச் சூதாட்டத்துலே நொம்ப பிரியண்டா! நொம்ப பத்தியோடே சூதாட்ற சீசாக்களைக் கண்ணாலே பாத்து முத்தி
கொடுக்கும்டா பேசற சாமிடா இது!
(இருவரும் எதிரில் உட்கார்ந்து கொண்டு சூதாடுகிறார்கள். அதைப் பார்த்திருந்த மகிபாலனுக்கு ஆட்டத்தில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது.)
மகி: (தனக்குள்) நாட்டை இழந்த அரசனுக்குப் பேரிகை வாத்தியத்தின் முழக்கம் எவ்வளவு மனோ வேதனையை உண்டாக்குமோ, அவ்விதமே பாய்ச்சிக் கைக் காய்களின் ஓசை
பணமில்லாத தரித்திரனாகிய என்னை மிகவும் வருத்துகிறதே! கோகிலத்தின் சங்கீதம் காதில் படுவது எவ்வளவு இன்பமாக இருக்குமோ அப்படி இருக்கிறதே இந்தக் காய்களின் ஒலி! இனி சூதாடக் கூடாதென்று எவ்வளவு உறுதி செய்து கொண்டாலும் பிறர் ஆடுவதைப் பார்த்தால் என் மனோ திடமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகிறதெ!