மகி : நான் இங்கே பணம் யாரிடத்தில் வாங்கிக் கொடுப்பேன்?
முண் : ஆருக்கிட்ட வாங்கினா எனக்கென்னடா? வெக்கங் கெட்ட நாயே! ஒங்கப்பனை வித்துக் குட்றா!
மகி : என் தகப்பன் இறந்து போய் விட்டானே! எமனுக்குத் தான் சீட்டு எழுத வேண்டும்.
முண் : இல்லாமே போனா ஒங்கம்மாளை வித்துக் குட்றா.
மகி : அவள் என் தகப்பனைத் தேடிக் கொண்டு போய் 3 வருடமாய் விட்டதே! அவளை நான் எங்கே காணப் போகிறேன்? அவள் இருக்கிற இடத்தைக் காட்டினால் அவளை விற்றுத் தருகிறேன்.
திண் : போடு பல்லு மேலே; பேசராண்டா வெறும் பேச்சு! இன்னும் செத்தே நேரத்துலே பணம் வராமெப் போனா நீ ஒங்கம்மா இக்கற வெடத்துக்கு போயிருவே. ஆச்சேபனை இல்லை. பேசாமே ரொக்கத்தெக் கீளே வச்சீன்னாப் பொளெச்சே.
முண்: இல்லாமெப் போனா ஒன்னையே வித்துக் குட்றா.
மகி : சரி! அப்படியே ஆகட்டும். என்னை இராஜ வீதிக்கு அழைத்துக் கொண்டு போங்கள்.
முண்: போகலாம் வா! (போகிறார்கள்)
திண் : (உரக்க) பத்து ரூவாய்க்கி இந்த மனிசனை விக்கிறோம்; வாங்கறவங்க வாங்கலாம். (பலதரம் கூவுகிறான்.)
ஒரு வழிப்போக்கன் : என்னையா கூச்சல்?
மகி : பத்து ரூபாய் கொடுத்து என்னை விலைக்கு வாங்கிக் கொள்ளும். நான் உமக்கு அடிமையாய் இருந்து ஊழியம் செய்கிறேன்.