கமலே : (தனக்குள்) சரி நம்ப ஆளு தப்பிச்சுக்கிட்டான். இந்த முண்டன் ராசாவுக்கு ரொம்ப வேண்டியவன். இவன் நம்ப தலெக்கிக் கல்லு வச்சுடுவான். பிரதாபன் என்கிற எடையன் ராசாவாகப் போரான்னு சோசியக்காரன் சொல்லிப் புட்டானாம். சானாபேரு அவங்கிட்டப்போயிச் சேந்துட்டாங்களாம். நானும் போயிச் சேந்துக்கறேன். (போய் விடுகிறான்.)
(வஸந்தஸேனையின் மாளிகை: ஒரு மஞ்சத்தின் மீது அவள் ஏதோ சிந்தனையின் ஆழ்ந்தவளாய்ச் சாய்ந்திருக்க, அவளுடைய பணிப்பெண் மல்லிகா விசிறியால் வீசுகிறாள்.)
மல்லி : அம்மா! இன்று பூஜைக்குத் தாங்கள் வர முடிய வில்லை என்று தங்கள் தாயிடத்தில் தெரிவித்து விட்டேன்.
வஸ : (தன் யோசனையில் இருந்து திடுக்கிட்டு) ஆகா! மல்லிகா! நீயா? என்ன சொல்லுகிறாய்?
மல்லி : பூஜை விஷயமாய் தாங்கள் செய்த உத்திரவைத் தெரிவித்து விட்டேன் என்றேன்.
வஸ : சந்தோஷம் (திரும்பவும் யோசனையில் ஆழ்கிறாள்.)
விருத்தம்: எதுகுல காம்போதி
மல்லி :
அன்னையே! அரியநங்காய்! அகத்தினை வருத்திச் சால
நின்னையே வதைக்கு மெண்ண மென்னென வுரைப்பா யென்பால்
பொன்னையே நிகர்த்த மேனி பொலிவெலா மிழக்கச் சோமன்
தன்னையே பழித்த வாமத் தண்முக மிழந்த கோலம்.