எங்ஙன முயர்ந்த வாகு மெழிலினாற் குணத்தாற் கூறாய்
பங்கமார் பொருளே யன்றிப் பிறிதெனப் பகர லாமோ?
எது மிகவும் அழகானது, எது மிகவும் நற்குணமுடையது என்று சொல்லப்படுகிறதோ, அது பெரிதும் துன்பத்தைத் தருவதாய் இருக்கிறது. குணமும் அழகுடைய பொருள் நமது மனதைக் கவர்ந்து நம்மை ஓயாக் கவலையிலும் ஒழியா மனோ வேதனையிலும் ஆழ்த்துகிறது. செல்வமென்பது சிந்தையின் அமைதி அல்லவா? எல்லாச் செல்வத்திலும் அருமையானதும் மேலானதும் மனதின் திருப்தி ஒன்றே! அவ்வித அருமையான திருப்தியைக் குலைத்து மனதைப் பாழாக்குகின்ற பொருளை நல்லதென்று சொல்லலாமோ? நம்முடைய பஞ்சேந்திரியங்களுக்கும் மனதிற்கும் எது இன்பத்தை ஊட்டுகின்றதோ அதையல்லவோ அழகுடைய பொருள் என்றும் நற்குணமுடைய பொருள் என்றும் கொள்ள வேண்டும்.
மல்லி : அழகான ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது எதனால்? அந்தப் பொருள் இன்பம் தருவதைக் காணவே, அதை நாமடைதல் வேண்டுமென்று மனதில் உண்டாகும் பேராசையினால் நமக்கு மனோ வேதனை உண்டாகிறது. நம்முடைய துன்பத்திற்கு நமது மனதே காரணமின்றி அந்தப் பொருள் இன்பத்தையே தருகிறது! இது யாருடைய குற்றம்? அந்தப் பொருளை அடைய நாம் அவ்வளவு ஆத்திரப்படுவானேன்? எல்லாவற்றினிடத்திலும் அதிக விருப்பும் வெறுப்பும் இல்லாமல் இருந்தால் நம் மனதில் அவ்வளவு வேதனை ஏன் உண்டாகிறது? ஆகையால் இன்பமும் துன்பமும் நம்முடைய மனதிலேயே இருக்கின்றன. நாம் நம்முடைய மனதை அடக்கி நடத்துவதில் இருந்து அவை ஏற்படுகின்றன.
வஸ : உலகத்தில் எல்லோரும் சந்நியாசியைப் போல மனோ உறுதியைக் கொள்ள முடியுமா? எல்லா மனிதரும் துறவிகளாய் விட்டால், இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் மாயா ரூபமான சிருஷ்டிப் பொருட்கள் யாவும் அனாவசியமாய் விடும். அவற்றைப் படைத்த ஈசுவரனுக்கும் ஒரு வேலையும் இல்லாமல் போய் விடும். உலகப் பற்றை ஒழித்த யோகியும் அழகென்று சொல்லப் படும் அந்த வஞ்சகப் பொருளின் மாய வலையில் பட்டுத் தத்தளிக்கிறான் என்றால், மற்றவரின் தன்மையைப் பற்றி சொல்வானேன். ஒரு பொருளைக் கண்டு நாம் வருந்துவது அந்தப் பொருளின் குற்றமாய் இருந்தால் என்ன? எவ்விதத்திலும் நாம் அந்த பொருளைப் பற்றி