மல்லி : (மேற்படி வர்ணமெட்டு) – ஆபேரி
மயிலே பழித்த இயலே செழித்த மணியே இனித்த மடமானே
மறையோர் குலத்தி லெழிலா ரொருத்தர் மனமீ திருத்தல் நிஜமாமே.
அப்படியானால் தங்கள் மனதிற் குடிகொண்ட புண்ணியவான் யாராவது பிராம்மணராய்த்தான் இருத்தல் வேண்டும். தாங்கள் சாதாரணமானவர்களின் மீது இச்சை கொள்வீர்களா? அவர் சகல விதமான கல்வியிலும் தேர்ச்சி பெற்றவரும் யெளவனப் பருவமுடையவருமான அந்தணராய்த் தான் இருக்க வேண்டும். ஆம், அதோ பாருங்கள்! உங்கள் முகத்தில் ஒருவிதப் புன்னகை உண்டாகிறதே!
வஸ: (மேற்படி வர்ணமெட்டு) - காம்போதி
கயலே பழித்த விழியாய்! படித்த மறையோர் மணத்தல் கருதார்கள்
அவரோ துதித்துப் பணிவோடிருத்த துருகான முற்று-மறிவோர்கள்.
பிராம்மணர்கள் வணங்கப்படுவதற்கு அருகரே ஒழியக் காதலிக்கப்படக் கூடியவர்கள் அல்லரே அதற்கென்ன செய்கிறது?
மல்லி : அப்படியானால் அவர் வைசிய ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கலாமோ? அந்த ஜாதியாரிடத்திலேயே பொருள் குன்று குன்றாய்க் குவிந்திருப்பதால் அதுவும் ஒரு விதத்தில் நல்ல சம்பந்தந்தான்.
வஸ: அடி மல்லிகா ஏதேது? நீ என்னை விட மாட்டாய் போல் இருக்கிறது! ஒவ்வொரு ஜாதியாய்க் கேட்டுக் கொண்டே வருகிறாயே! கடைசியாக நல்ல வார்த்தை சொன்னாய்! வெட்கக் கேடு, வைசியனை யாராவது கணவனாய் அடைவார்களோ? திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் பழமொழி அவர்களுக்காகச் சொல்லப்பட்டதல்லவோ? இரவிலும்