(மகிபாலன் அவர்களிருந்த இடத்திற்குள் வேகமாய் ஓடி வந்து வஸந்தஸேனையின் காலில் விழுகிறான்.)
மகி : அம்மணி! அபயம்! அபயம்! இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.
வஸ : கொடுத்தேன் அபயம்! எழுந்திரு! மல்லிகா! வாசற் கதவை மூடிவிடு. (மல்லிகா போகிறாள் யாரைக் கண்டு இப்படி ஓடி வருகிறாய்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது?
மகி : கடன்காரனுக்காக பயந்து ஓடி வருகிறேன்.
வஸ: அடி மல்லிகா கதவைத் தாளிட்டு விடு.
மகி : (தனக்குள்) ஆகா கடன்காரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் இவள் என்னைக் காட்டிலும் அதிகமாய்ப் பயப்படுகிறாளே! இதுவும் அதிர்ஷ்டந்தான் ஏராளமான செல்வமும், நற்குணமும் பெற்ற இந்த ஸ்திரீ எனக்கு உதவி செய்யாமல் இருக்க மாட்டாள். பார்க்கலாம்.
(வீட்டிற்கு வெளியின் முண்டன், திண்டன் இருவரும் வருகிறார்கள்.)
முண் : அவன் எங்கிட்டுத்தான் போனான். அவனே உடப் போறதில்லை! நமக்காச்சு அவனுக்காச்சு! பார்க்கலாம் ஒரு கையி.
திண் : அவனாவது இன்னமே ஆப்புடவாவது! அவன் என்ன சாகசீகம் சேஞ்சுப்புட்டுப் போய்த் தாங்கிறேன்.
முண் : அவன் மூக்கே கீழே போட்டுத் தேச்சு மூஞ்சிலே மோடு பள்ளம் இல்லாமெ நெரவிப்புட்டேனே! இந்தாலே பாரு இன்னம் நெத்தம் சொட்டிக்கினே ஓடிக்கிறான்.
திண் : நெத்தம் இந்த ஊட்டுக்குள்ளே போயிருக்குதுடா ஆப்புட்டுக்கிட்டாண்டா ஆளு. இந்த ஊட்டுக்குள்ளற ஒளிச்சிக் கினுக்கிறாண்டா திருடன்.