வீர : இதென்ன அதிசயம்; வஸந்தஸேனை எப்படியோ உயிருடன் வந்து விட்டாளே! நான் இனிமேல் இங்கிருப்பது பிசகு, ஓடிப் போக வேண்டும். (ஓடுகிறான்)
1 சண் : அண்ணே அவனெ உடாதே! ஓடறான்!
(இருவரும் ஜனங்களும் அவனைத் தொடர்ந்து ஓடுகிறார்கள்)
மாத : காயும் பயிரில் மழை பெய்ததைப் போல் கழுவிற்கு மேல் உயர்த்தப்பட்ட என்னைக் காப்பாற்றியது யார்? இவள் வஸந்தஸேனை தானோ? அல்லது அவளைப் போல ஒரு உருவம் என்னைக் காக்கும் பொருட்டே ஆகாயத்தில் இருந்து குதித்ததோ! நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனோ? அல்லது கனவு காண்கின்றேனோ! என் புத்தி மாறாட்டம் அடைந்ததோ! என்னை இந்த விபத்தில் இருந்து விலக்கும் பொருட்டு அவளே தெய்வலோகத்தில் இருந்து மனித சுவரூபத்துடன் தோன்றினாளோ?
வஸ : (அவர் பாதத்தில் விழுந்து) எவ்வளவோ மேன்மையைப் பெற்ற தங்களுக்கு, இந்தத் தீங்கு சம்பவிக்கக் காரணமாய் இருந்தவள் எவளோ அவளே வந்தனள்!
மாத : ஆகா! கடைசியில் தருமமே ஜெயமடைந்ததோ! ஈசுவரனுடைய மகிமையே மகிமை! இந்தச் சந்நியாசி யார்?
வஸ : இவரே என் உயிரைக் காப்பாற்றியவர்.
மாத : அப்படியா! ஸ்வாமீ! நமஸ்காரம்! தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.
(அருகில் பெருத்த சத்தம் உண்டாகிறது)
”பிரதாப ராஜனுக்கு ஜெயம் உண்டாகட்டும். புதிய அரசன் நீடுழி வாழ்வாராக.”
(சசிமுகன் வருகிறான்)