(தனக்குள்) இந்த தேசத்து அரசன் செய்த அக்கிரமச் செயல்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனை இந்தக் கைகளே கொன்றன. மூவுலகத்தையும் கவரக்கூடிய வல்லமை பெற்ற பிரதாபனுடைய குணமே குணம்! அவன் சிம்மாசனம் ஏறியவுடன் செய்த முதல் காரியத்தில் இருந்தே அவனுடைய மனதின் மேன்மை நன்றாகத் தெரிகிறது. இதுதான் இடம். மாதவராயர் இங்குதான் இருப்பார்! ஆகா! அதோ வஸந்தஸேனையும் நிற்கிறாளே! (மாதவராயரை வணங்கி) ஸ்வாமி நமஸ்காரம்.
மாத: ஐயா! தாங்கள் யார்?
சசி :உங்கள் மாளிகையில் கன்னம் வைத்து, உங்களிடம் வஸந்தஸேனையால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடியவன் நான்தான். என்னுடைய குற்றத்தைத் தங்களிடத்தில் ஒப்புக் கொண்டு, தங்களுடைய மன்னிப்பைப் பெற வந்தேன்.
மாத :அப்படியா! சந்தோஷம்! நீர் செய்தது குற்றமல்ல! நல்ல காரியமே செய்தீர். வேறு ஏழையின் வீட்டில் திருடி அவனை வருத்துவது இதனால் இல்லாமல் போயிற்றல்லவோ.
சசி : ஆகா! எப்பொழுதும் மேன்மைக் குணமே! ஸ்வாமி! தங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். யாவருக்கும் தீமை செய்து வந்த நமது கொடுங்கோல் அரசனைக் கொன்று விட்டோம். அவனுக்குப் பதிலாகப் பிரதாபன் சிம்மாசனம் ஏறிவிட்டான். உயர்குலப் பிறப்பும் நற்குணமும் பெற்ற தங்களுக்குத் தன் மரியாதையைச் செலுத்த என்னை அனுப்பினான்.
மாத : அதிசயம்! என்ன இதுதான் சர்வ வல்லமை உடைய கடவுளின் செயலோ?
சசி : கடைசியாக உங்களுடைய வண்டியில் ஏறிப் போன அந்த உதவியை அவன் மறக்கவே இல்லை; இனி எப்போதும் மறப்பதில்லை என்றும் தெரிவித்தான். நீங்கள் செய்த பேருதவிக்குச் சன்மானமாகத் தங்களை முதல் மந்திரியாக்கி இருக்கிறான்.
மாத: ஹா! கருணாநிதியே! உன்னுடைய திருவிளையாட்டை என்ன என்று சொல்லுவேன்?