அவன் தலைமுடியாலேயே வாயடைக்க வைத்தார்கள்.
சுயம்பு கத்தப் போனான். கதறப் போனான். உடம்பை அங்குமிங்குமாய் ஆட்டினான். இதையெல்லாம் எதிர்பார்த்த மாதிரி கிடுக்கிப் பிடிகள். ஆனாலும் அப்படி பிடி போட்டவர்களால்கூட, அவன் கண்களில் பெருக்கெடுத்த நீரை நிறுத்த முடியவில்லை. முன்பக்கமாய்க் குவிந்த முடிக்கற்றையில், அந்தக் கண்ணிர்த்துளிகள் உருண்டு உருண்டு, கருமேகம் ஒன்று, மழைத்துளிகளை உருட்டிவிடப் போவது போல் இருந்தது.
சுயம்பு எல்லோரையும் நொந்துகொண்டே, வெந்தான்.
‘எக்கா... நீ அப்படிப் பேசாவிட்டால், நான் இப்படி ஆவேனா... அண்ணா... ஒன் காலடியிலேயே காலமெல்லாம் கிடக்கேன்னு சொன்னேனே... இப்போ ஒரு அரிவாள் அடியிலே துடிக்கேனே... டேவிட் ஒரு லட்டருக்குக்கூட பதில் போடாத நீங்கள் ஒரு மனிதனா டேவிட்! அடிப்பாவி வஞ்சகி... நீ பச்சையம்மா இல்லடி கொச்சையம்மா. என்னை டில்லிக்கு விரட்டாமல் விரட்டி, இந்தக் கோலத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நீதாண்டி காரணம். அடே குருவலி... ஒன்ன நான் டி.வி.யில உலகறியச் செய்ததுக்காடி என்ன இங்க கொண்டு வந்து அடைச்சே... இருக்கட்டும், இருக்கட்டும். உயிரோட ஒன்னப் பார்த்தால், முதல் வெட்டு ஒன் தலைக்குத்தான்... எனக்கும் ஒரு அரிவாள் கிடைக்காமலா போகும்... அப்பா... அம்மா... நீங்க ரெண்டு பேரும்தான் என் நிலமைக்குக் காரணம். ஒங்கள அப்படிக் கூப்பிடறதே பாவம்...’
சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு தடவையில் ஆறு தடவை அடித்தது. உடனே ஏழாவது சத்தத்தில் கீழே இறங்கிய அரிவாள், எட்டாவது சத்தத்தில் செந்நீரோடு மேலே நிமிர்ந்தது. எட்டாவது சத்தம் கேட்பதற்கு முன்பே, பானைக்குள் ஒரு சத்தம். சுயம்பு கீழே கிடப்பது துள்ளுவது போலவே துள்ளினான். அதற்குள், வாய்க்குள் இருந்த முடி நாக்கைச் சுற்றியது. முகத்தோடு சேர்த்து மூக்கடைப்பு. யாரோ இரண்டுபேர், இரண்டு இருபக்கமும் கைகளைப் பிய்த்தெடுக்கப் போவது போன்ற இழுப்பு...
சுயம்பு அப்படியே மயங்கி, சுவரில் சாய்ந்தான். நினைத்து நினைத்து நினைவே சூன்யமானது... அழுது அழுது கண்ணிரே கட்டியானது.
எல்லா அலிகளும் கீழே பீறிட்டு விழும் ரத்த அருவியையே பார்த்தார்கள். அவர்கள்