(Reading time: 15 - 30 minutes)
Vata malli
Vata malli

பெங்காலியில் பேசினார்கள். உருவமும், உள்ளடக்கமும் மாறினாலும், தாய்மொழிக்காரிகளிடம் பிற மொழியில் பேசாத வங்காள ரத்தத்தின் ரத்தங்கள். அந்த பெங்காலி அலிகள் சொன்னதை நீலிமா லட்சுமிக்கு இந்தியாக்க, அவள் சுயம்புவின் ஒரு காலை எடுத்துத் தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவள் உட்கார்ந்தால், தானும் உட்காருவது ஒரு அவமானம் என்று நினைத்ததுபோல் குஞ்சம்மா அவன் இன்னொரு காலை எடுத்து நின்றபடியே தன் இடுப்போடு இணைத்துக்கொண்டாள். மார்கரெட் நசிமாவின் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை பின்பக்கமாய்ச் சாய்த்தாள். அத்தனையும் செல்லப்பிடிகள் தான்.

  

சுயம்பு உதறப் போனான். லட்சுமி அறிவுறுத்தினாள்.

  

சும்மா அப்படியே கெட்டி. இது நல்ல மருந்து...”

  

சுயம்பு அப்படியே கிடந்தான். ஒரு அலி ஆவி பறக்கும் எண்ணெய்க்குள், ஒரு ஸ்பூனைமொண்டு, சுயம்புவின் காயம்பட்ட இடத்தில் கவிழ்த்தினாள். உடனே வெந்நீர் அலி, அதே மாதிரி சுடு நீரைக் கொட்டினாள். ஆரம்பத்தில் பிராணன் போவது மாதிரி வலி. முகத்திலேயே ஒரு சுரீர் ஒலி. அப்புறம் ஒரு இதம். அப்படி ஊற்றவில்லையானால்தான் வலிக்கும் என்பதுமாதிரியான நிலை. சுயம்பு சும்மாவே கிடந்தான். லட்சுமி சிகிச்சை அலிகளை ‘சம்திங்காக’ பார்த்தபோது, அவர்கள் கையை ஓங்கினார்கள். ‘நாங்க என்ன ஆஸ்பத்திரிகாரிகளா’ என்றார்கள். ‘அதுவும் குரு அலியோட வாரிசுகிட்டயா’ என்று யோக்கியத்தனத்தில் பாதியைக் குறைத்துக்கொண்டு பேசினார்கள்.

  

நீலிமா தவிர, மற்றதுகள் சுயம்புவை பிரமித்துப் பார்த்தனர். இந்த நீலிமாதான் பொய் மரியாதையுடன் முகத்தைக் கோண வைத்து, தலையைத் தாழ வைத்துக் கையை மேலே கொண்டுபோய் ‘சலாம் சாப், சலாம் சாப்’ என்றாள். ஒன்றும் புரியாமல் விழித்த சுயம்புவுக்கு, லட்சுமி விளக்கம் சொன்னாள்.

  

நீ நம்ம குருவுக்கு வாரிசாகப் போறியாம்... இது வரை எவளையும் மகளா தத்து எடுக்காத அந்தக் கிழவி ஒன்ன மகளா எடுத்தது ஒரு பெரிய அதிசயமாம்... எல்லாச் சொத்தும் ஒனக்குத்தானாம். எல்லாம் முர்கே மாதாவாலி அருள்.”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.