குரு அலி கங்காதேவி, ஒரு தட்டோடு உள்ளே வந்தாள். அதில் இரண்டே இரண்டு காய்ந்த ரொட்டிகள். இதேமாதிரியான கோலத்தில் அவளைப் பார்த்தறியாத சேலாக்கள் அவள் பக்கம் ஓடிப்போய் அந்தத் தட்டை வாங்கப் போனார்கள். ஆனால், அவளோ ஒரு தலையாட்டு மூலம் அவர்களை நின்ற இடத்திலேயே நிறுத்திவிட்டு, தன்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிய சுயம்புவைப் பார்த்தே நடந்தாள். அவன் கால்மாட்டுப் பக்கமாக உட்கார்ந்தாள். அவள் பார்த்த பார்வையில் எல்லோரும் வாசலைப் பார்த்தார்கள். சிகிச்சை அலிகளும் காலிப் பாத்திரங்களைக் காட்டிவிட்டு, போய்விட்டார்கள். புறப்படப் போனவர்களில் லட்சுமியின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, கங்காதேவி, மற்றவர்களைப் போகும்படி தலையாட்டினாள். சுயம்புவைப் பார்த்துப் பேசப் பேச லட்சுமி, அதைத் தமிழாக்கிக் கொண்டிருந்தாள். மனம் ஒன்றும்போது திறமை தானாய் வெளிப்படும் என்பதற்கு லட்சுமி உதாரணமாகி விட்டாள். குரு அலி மூச்சு வாங்கும்போதெல்லாம், லட்சுமி சுயம்புவுக்குப் பேச்சு வாங்கிக் கொடுத்தாள்.
“சுயம்பு... என்மகளே... என் வயத்துல பிறக்காமல் உன் வாஞ்சையில பிறந்த மகாராணியே... ஒனக்கு என் மேல் கோபம் இருக்கதை ஒன் பார்வையாலேயே தெரிஞ்சுக்கிட்டேன். நீ இந்தத் தியாகத்திற்கு சம்மதிச்சது நம்மோட அலி சமுதாயத்தின் பொது வாழ்க்கைக்கு அவசியப்பட்டது. முழுப் பெண்ணான சேலா அலிகளில் யாரையும், தத்து எடுக்காமல், பாதிப் பெண் போல் இருந்த உன்னை தத்து எடுத்தால், நம் சமுதாயம் என்னையே மதிக்காது... நம் சமூகத்தில் வெட்டுப்படாதவங்க வெட்டுப்பட்டவங்கள விட ஒரு படி தாழ்த்தி, லுங்கி கட்டுறவங்க, சேலைகட்டுறவங்களைவிட, அந்தஸ்துல சின்னவங்க... என் சிஷ்யைகள் ஒன்ன தாழ்வா பார்க்கக் கூடாதுன்னுதான் இதுக்கு ஏற்பாடு செய்தேன்... என்னமோ தெரியல... ஒன்னப் பார்த்த உடனேயே என்னோட மலட்டு வயித்துல ஒரு துடிப்பு... என் வாழ்நாளுல எனக்காக நான் செய்துக்கிட்ட ஒரே ஒரு நன்மை, ஒன்ன நான் தத்து எடுத்துக்கிட்டதுதான்...”
“என் கண்ணே... நான் அடிக்கடி பேசுறவள் கிடையாது. என்னப்பற்றித் தம்பட்டம் அடிப்பதும் கிடையாது. ஆனாலும், மகளான ஒன்கிட்ட சொல்லியாகணும். நீயாவது கொடுத்து வச்சவள். நான், என்னையே யார்னு தேடிக்கிட்டு முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால இங்க வந்தேன். ஜமீன் குடும்பத்துல ‘சூடு’ வச்சாங்க... ஒனக்கு இரும்புச் சூடுன்னா... எனக்கு வெள்ளிச்சூடு... எப்படியோ, அங்கே இருந்து, தப்பிச்சு கர்நாடகத்துல பெல்காம் பக்கத்துல இருக்கிற எல்லம்மா கோவிலுல நம்மள மாதிரி பாவப்பட்ட தேவதாசிகளோடு இருந்தேன். அப்புறம் டெல்லி. அப்போ இது ஒரு காடு. என் நிலயப் புரிஞ்சுக்கிட்ட, பலர் என்னை ஆட்டிப்