முகங்களில் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி. அந்த ரத்த ஊற்று நிற்கக்கூடிய அனுமான நேரத்தைச் சரி பார்ப்பது போல், சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார்கள். ரத்த அருவி சிறுகச் சிறுக நின்று, மலைக் குன்றைக் காட்டும் ஆறுபோல், சதையைக் காட்டியது.
சுயம்புவின் வாயிலிருந்து, தலைமுடி எடுக்கப்பட்டது. கைகள் அவனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவனால்தான் ஒப்படைக்கப்பட்ட கரங்களை இயக்க முடியவில்லை. இப்போது அந்த அலிகளே அவற்றை இயக்கினார்கள். அவன் கைகளைப் பிடித்துக் கழுத்துப் பக்கம் போட்டுக்கொண்டே ஒரு அலி புறப்பட்டது. இன்னொரு அலி அவன் கால்களைத் தாங்கிக்கொண்டது. அவன், எந்த அறையில் இருந்தானோ, அந்த அறையில் - அதே ஒற்றைக்கட்டிலில் ஒரு உறுப்பு இழந்து போடப்பட்டான்.
மறுநாள், எப்போது கண் விழித்தானோ, அப்போது அவன் கண்களில் நீலிமா கோஷ்டியினர் பட்டார்கள். நீலிமா அவன் தலையைக் கோதிவிட்டாள். வெட்டுச் சிகிச்சை சுகமாய் நடந்தது போன்ற ஒரு குளிர்ச்சிப் பார்வை. நசிமா தனது பணியைச் செய்யக் காத்திருந்தாள். லட்சுமியும், குஞ்சம்மாவும்தான் சேர்ந்தாற்போல் அழுதார்கள். கங்காதேவி கிழட்டுக்கு அவனைப் பறிகொடுத்தாலும், பிள்ளைப் பாசம் அவர்களை உலுக்கிக் குலுக்கியது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை, அவர்கள் பார்வை காட்டியது. நீலிமாதான், தனக்கும் அழுகை வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு அதட்டு போட வேண்டியதாயிற்று.
சுயம்பு, லட்சுமியும், குஞ்சம்மாவையும், காய முணங்கலோடு பார்த்தான். பிறகு அவர்கள் பார்த்த இடத்தை, தானும் பார்த்தான். தலையைத் தூக்கி தலையைக் கீழே தாழ்த்திப் பார்த்தான். பார்க்க முடியாமல், கண்களை மூடினான். நசிமா அவன் தலையை நிமிர்த்தி, தனது வயிற்றில் சாத்திக் கொண்டாள். நீலிமாதான் இந்தியில் சந்தேஷமாகப் பேசினாள். டோலக் அடிப்பதுபோல் கைகளை வைத்துக்கொண்டு லடுக்கி, லடுக்கி என்று ஒரு நாட்டுப்புறப் பாட்டைப் பாடினாள். இதற்குள் வாட்டசாட்டமான இரண்டு அலிகள் உள்ளே வந்தார்கள். இருவர் கைகளிலும் இரண்டு சின்னப் பாத்திரங்கள். இரண்டுமே ஆவிஆவியாய் மூச்சு விட்டன. ஒன்றில் கொதிக்கும் எண்ணெய். இன்னொன்றில் அதைவிட அதிகமாகக் கொதித்த வெந்நீர்.
சுயம்பு அவர்களைத் துக்கித்துப் பார்த்தபோது, அவர்கள் அவனைப் பார்க்காமல் நீலிமாவிடம்