(Reading time: 15 - 30 minutes)
Vata malli
Vata malli

இல்லே, டி.வி. மாதா கிருபா...”

  

லட்சுமியும், குஞ்சம்மாவும் கைகளை நீட்டி நீட்டி, தட்டித் தட்டிப் போர்ப்பரணி பாடினார்கள். அடிக்காத குறைதான். இன்றைக்காவது அடிச்சுக்கட்டும் என்பது மாதிரி எல்லோரும் சும்மா நின்றபோது அவர்கள் வாய் வலித்துப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டது போல் வேறு வேறு பக்கமாக முகம் திருப்பினார்கள். சுயம்பு, வேதனையோடு முனங்கினான்.

  

எல்லாம் போயிட்டு... இனிமேல் சொத்து வந்தா ஆகப்போகுது... விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டுனதுமாதிரி... கழுதைக்கு, முத்துமாலைன்னு பேரு வெச்சதுமாதிரி... எங்க அக்காவ விட எந்தச் சொத்து உசத்தி... அவளே எனக்கு இல்லாம போயிட்டாள்...” பள்ளிக்கூடத்தில் முதலாவது வந்தும், வாழ்க்கையில் பின்னால் வந்தாச்சு...

  

லட்சுமியால், தாள முடிந்தாலும், குஞ்சம்மாவால் தாள முடியவில்லை. அதிர்வேகமாய் திரும்பி, அவன் பக்கமாய் குவிந்து, கண்களைத் துடைத்துவிட்டாள். நீலிமா விவரம் புரியாமல் விளக்கம் கேட்டாள். லட்சுமி, விளக்கியதும், நீலிமா, முகம் திருப்பினாள். அழவைப்பது தவிர, அழுதறியாத நீலிமாவை, அப்படிப் பார்த்ததில் நசிமாவுக்கு அதிக அழுகை வந்தது. வங்காளத்தில், பள்ளியில் படிக்கும்போதும், பாட்டென்ன, பேச்சென்ன... பரிசுகள்தான் என்ன... வங்காள லதா என்று பட்டம் வாங்கிவிட்டு இப்போது ஒரு தெருப்பாடகியாய், உள்ளுக்குள் ஒரு பிச்சைக்காரியாய்... ஒலமிட வேண்டிய நிலை... இதைப் பிரதிபலிப்பது போல் மார்கரெட் ஏசுவே! ஏசுவே என்றாள்.

  

மயான அமைதி. ஒவ்வொருவரும் இயற்கை கொடுத்த சுமையை மேலும் கனமாக்கிய பெற்றேரையும் மற்றோரையும் நினைத்துப் பார்த்தார்கள். மனத்தைப் பின் நோக்கி நகர்த்தினார்கள். அந்த வைத்திய அலிகள்கூட, அந்த மயானப் பார்வைக்குக் கட்டுப்பட்டது போல் சிறிது இடைவேளையாய் நின்றுவிட்டு, மீண்டும் எண்ணெயையும் வெந்நீரையும் மாறி மாறி ஊற்றினார்கள். சுயம்பு, துக்க உணர்வோடு பார்த்தான். நீலிமாவின் கையை எடுத்துத் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டான்.

  

திடீரென்று எல்லோரும் எழுந்தார்கள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.