“நீ இப்படிச் சொல்லாம கொள்ளாமப் போகலாமா மகளே... இந்தப் பாவிய போலீஸ் வந்து ஒன்ன ஒப்படைக்கும்படி கேட்டுது. அதுல ரெண்டு பல்லு போயிட்டு... ஒரு காலு ஊனமாயிட்டு... இப்போ ஒன்னரைக் காலுலதான் நடக்கேன். நானாவது குற்றவாளி. குருவக்கா என்ன செய்தாள், மூணு மாசம் ஆஸ்பத்திரியில கெடந்தாள். ‘அதுல’ மிதிச்ச மிதில இப்போ அவளுக்கு ‘ஒண்ணுக்கு’ சரியா போகமாட்டக்கு... அவஸ்தைப் படறாள்.”
“பழைய கதை எதுக்கு பச்சம்மா... நமக்கு சந்தோஷம் என்கிறதே ரொம்பக் குறைச்சல். அதை வேற மேலும் குறைக்கணுமா... சுயம்பு. எப்படி இருக்கே... நீ நல்லா இருக்கது நாங்க நல்லா இருக்கதுமாதிரி இருக்குடி.”
“ரெண்டுபேரும் என்கூட டில்லிக்கு வந்துடுங்க.”
“வேண்டாண்டி... நான் இங்க இல்லாட்டா... இவளுவள போலீஸும், பொறுக்கிங்களும், சீரழிச்சுடுவாங்க நான் இருக்கக்கண்டிதான் அவங்க கையில காலுல விழுந்து இவளுவ வயித்துல அடிபடாம பார்த்துக்கறேன்.”
“அப்போ எங்கம்மாவ மட்டுமாவது கூட்டிட்டுப் போறேன்.”
“எனக்குக் கை ஒடிஞ்சதுமாதிரி இருக்கும். இருந்தாலும் கூட்டிட்டுப் போ. இவ்வளவு நாளும் ஒன்னத் தான் நெனைச்சுட்டிருந்த அப்பாவி... ஒன் பக்கத்துல இருந்தாத்தான் இன்னும் கொஞ்ச நாளைக்காவது உயிரோட இருப்பாள்.”
பச்சையம்மா, எழுந்தாள். மேகலையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு “மவளே, மவளே... நீ என்ன மறக்கலை மகளே. அந்த ஆஸ்பத்திரியில பார்த்த அதே மகளாத்தான் இருக்கே மகளே!” என்று பழைய பச்சையம்மாவாய் அதே மாதிரி அரற்றியபோது
“ஆம்புள கெடைக்காம இப்போ பொட்டைக்கு பொட்டையே கட்டிப் பிடிக்கீங்களா?”
எல்லோரும் எதிர்த்திசையைப் பார்த்தார்கள்.