சில்லாய் நொறுங்கின. ஈயப் பானைகள் அந்தப் பழைய குட்டையில் விழுந்தன. குடிசைகளைக் காப்பாற்ற ஓடிய பல அலிகள், திரெளபதிகளாக நின்றனர். இதற்குள் நீலிமா குரல் கொடுத்தாள்.
“போலீஸ் மர்தாபாத்... போலீஸ் மர்தாபாத்.”
அந்த மர்தாபாத் என்ற வார்த்தையின் பொருள் புரியாத அத்தனை பேரையும் அந்த வார்த்தை எப்படியோ பற்ற வைத்தது. ஒவ்வொரு உடம்புக்குள்ளும் ஒரு நெருப்பு ஜ்வாலை எரிந்தது. அடிபட்டு நோகும் அத்தனை அலிகளும் கிலி விட்டுப் போனது போல் போலீஸாரை சூழ்ந்தார்கள். ரத்த சாட்சியோடு கத்தினார்கள். இதற்குள் அந்தக் காட்டுத் தீயின் உஷ்ணத்தால் சூடு வந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அந்தச் சேரியிலுள்ள சராசரிகளும், இப்போது அசாதாரணங்களாத் திரண்டனர். தடியடிக் கம்புகளைத் தாவிப் பிடித்தார்கள். எங்கிருந்தெல்லாமோ ஓடி வந்தார்கள். வெளிமன அவமானச் சுவடுகளும் அவற்றின் எச்சங்களான அச்சங்களும் அடிமனக் கோபாவேசத்திற்கு வழிவிட்டன, தெரு நாய்கள், வேட்டை நாய்களாயின. வீட்டுப்பூனைகள் காட்டுப் பூனைகளாயின. உள்ளேயும், வெளியேயும் ஒரே சத்தம்.
தொலைவிலிருந்து கல்விச்சு... அருகிலிருந்து எழுத்தில் கொண்டுவர முடியாத இதயம் பதித்த வசவுகள்... சிலர் ஆவேசப்பட்டு உடைகளைத் தூக்கியதும் உண்மைதான். அந்தச் சேரியே பற்றி எரிவது போலிருந்தது. வயிற்றில் எரிந்தது, அந்த வளாகத்தையே எரிப்பதுபோல் தோன்றியது. சரமாரியான கல்விச்சு. கதவடைப்பு. அந்தப் போலீஸ் அதிகாரி துப்பாக்கிப் பக்கம் கையைக் கொண்டு போனார். மேகலை அந்தத் துப்பாக்கியின் குழாயைத் தனது கைகளால் மூடினாள். உடனே டில்லிக்காரிகள் அவளையும் அந்தத் துப்பாக்கிக்காரரையும் அங்கு மிங்குமாய் தள்ளினார்கள். கூச்சல் போட்டார்கள். குமுறிக் குமுறி முழங்கினார்கள். ஏச்சுக்கள், அந்த ஏரியாவின் எல்லையைத் தாண்டின.
அந்த போலீஸ் ஆசாமி, அதிர்ச்சியடைந்தார். ஆழம் தெரியாமல் காலை விட்ட கவலை. துப்பாக்கியால் சுட்டால் எத்தனை பேர் சாவார்கள்? எஞ்சியவரை என்ன செய்யமுடியும்? ஆறே ஆறு லத்திக்கம்புகள் என்ன செய்ய முடியும்? அவர் பின்வாங்கப் போனார். ‘இரவில் ரதகஜ துரக பதாதிகளோடு வரலாம்’ என்றால், ஒரு வழியடைப்பு. போதாக்குறைக்கு, பென்சிலும் குறிப்பு நோட்டுமாய் ஏழெட்டுப்பேர். செகரட்டேரியட் பிரஸ்மென்... வீட்டுக்குத் திரும்பியவர்கள்,