சத்தம் கேட்டு வந்ததுபோல் தெரிந்தது. ஜோல்னாப் பையை ஒரு கையால் தடவி மறுகையால் மோவாயைத் தடவி அங்குமிங்குமாய் சூழ்ந்தார்கள். மேகலையிடம் ஒரு பேட்டி, நீலிமாவிடம் ஒரு பேச்சு. பச்சையம்மாவிடம் ஒரு கிசுகிசுப்பு. துப்பாக்கிக்காரரிடம் ஒரு குறுக்கு விசாரணை.
இதற்குள், ஒரு அலிஸ்டெண்ட் கமிஷனர் ஒரு பெரும் படையோடு வந்தார். எந்த டெலிபோன் சொன்னதோ. அங்கே நின்ற செய்தியாளர்களைப் பார்த்ததும் அவரது இரும்புமுகம், கரும்பு முகமானது. தடியடிக்கு ஆணையிடப் போனவர், தடியடி பட்டவர்போல் தவித்தார். பத்திரிகைக் காரர்களையே உற்றுப் பார்த்தார். ‘இந்து’ ரவி, ‘எக்ஸ்பிரஸ்’ கோபால், ‘தினத்தந்தி’ சுகுமார், ‘தினமலர்’ நூருல்லா, ‘பிடிஐ’ வெங்கடேஷ், ‘யுஎன்ஐ’ ரமேஷன், ‘மாலைமுரசு’ மோகன்ராஜ், ‘தினத்தூது’ கனகராஜ், ‘தினமணி’ ஜெகன்னாதன் இந்த மாதிரி செய்திகளை மருந்துக்கும் போடாத ‘வானொலி’ செய்தி ஆசிரியர் சமுத்திரம்.
அந்த நட்சத்திர அஸிஸ்டெண்ட் கமிஷனர் மேகலைப் பக்கம் போனார்.
“என்னம்மா நடந்தது?”
“நீங்களே என்ன நடந்திருக்குமுன்னு தெரிஞ்சுக்க லாம். அந்தக் குட்டையில கிடக்கிற பாத்திரங்களைப் பாருங்க. மண்ணுல சரிஞ்ச குடிசையைப் பாருங்க. என் வாயில வழியற ரத்தத்தைப் பாருங்க. குறுக்கே பேசாத லட்சுமிக்கா... இந்தாங்க சார் என் விசிட்டிங் கார்டு... இதையும் வச்சுக்குங்க. இது என்னோட பிதாஜி கார்டு... அவரு வீட்லயும் ஒரு ஐ.பி.எஸ். இருக்கார்.”
“ஸாரி. நீங்க யாருன்னு தெரியாமல்...”
“இங்கதான் ஸார் எல்லாருமே தப்பு செய்யுறோம். யாருன்னு தெரியாமல் அடிக்கிறத பொறுத்துக்கலாம். தெரிஞ்சுக்கிட்டே அடிக்கிறத எப்படி சார் பொறுத்துக்க முடியும்? இந்த அலி ஜீவராசிகளுக்கு என்ன சார் இருக்குது? அரசாங்கத்துலயும் வேலை கிடையாது. கடைகண்ணியிலயும் சேர்த்தியில்ல... யாருக்கெல்லாமோ கருணை காட்டுறதாய் சொல்ற தமிழ்நாடு அரசு, இவங்க பக்கம் கண்ணைக் காட்டல... இவ்வளவுக்கும் அமைச்சருங்க போகிற சாலைப் பக்கம்தான் இவங்க அலையுறாங்க... நடக்கிறாங்க.”