சொல்றபடி நடந்துக்குங்க! நம்பர் ஒன், இந்தப் படத்துக்கு இந்த நிமிடத்திலிருந்து நீங்கதான் கதாசிரியர், திரைக்கதை, வசனமும் நீங்கதான்! என்னை உங்க உதவியாளரா, மற்றவங்களுக்கு அறிமுகப்படுத்துங்க! எல்லாம் நான் செய்துதரேன், ஆனா உங்க பேரிலே!"
" மிஸ்டர்! எனக்கு சொல்லத் தெரியலே, ஏதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டாமாதிரி நீர் சொல்றதுக்கெல்லாம்........."
" ஐயா! நான் உங்க உதவியாளர்! என் பெயர்........நீங்களே தேர்ந்தெடுங்க! என்னை மரியாதையா 'நீர்'னு கூப்பிடாதீங்க, 'நீ', 'வா' 'போ'ன்னு பேசுங்க! அப்பத்தான் மற்றவங்க நம்புவாங்க!"
" சரி, உன் பெயர் தேவநாதன்! நல்லாயிருக்கா?"
" தெய்வக் கலப்புள்ள எதுவும் நல்லாத்தான் இருக்கும், ஐயா!"
" தேவநாதன்! நீ இங்கேயே என்னுடனேயே தங்கிடேன், அப்பத்தான் வசதியாயிருக்கும், உன் குடும்பத்தையும் அழைச்சிண்டு வா! அவுட் ஹவுஸிலே தங்கிக்கோ!"
" என் குடும்பம் ஶ்ரீவைகுண்டத்திலே இருக்காங்க! அவங்க இங்கே வரமாட்டாங்க. நான் மட்டும்தான்!"
" நல்லதாப் போச்சு! என்னுடனேயே தங்கிக்கோ! ஆமாம், இவ்வளவு நெருங்கி வந்துட்டோம், இப்பவாவது, கதையை எனக்கு சொல்லக்கூடாதா?"
" ஐயா! கடவுளை முழுமையா நம்பணும்! உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது, யார்? தேவநாதன்!"
" ஓ.கே., ஓ.கே!"
" ஏன் சொல்றேன்னா, ஒரு கதையை ஒருவர் கற்பனை செய்யும்போதே, மாறிண்டேயிருக்கிற மனதினாலே, கற்பனையும் தாறுமாறா ஓடும்! ரெண்டுபேர் சேர்ந்தால், முறிந்துபோயிடும்!"
" இப்ப நான் என்ன செய்யணும்?"
" உங்களுக்கு நம்பிக்கையான டைரக்டரா கூப்பிட்டு ஒப்பந்தம் போடுங்க, அவருக்கு நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கிற உரிமையை கொடுங்க! ஏ.ஆர். ரகுமானிடம் நீங்களே பேசுங்க!"
" அவர் என்னவிதமான கதைன்னு கேட்பாரே......?"
" நான்தான் உங்ககூடவே இருப்பேனே, கவலைப்படாதீங்க!"
மறுநாளே, இருவரும் இசைப்புயலை சந்தித்தனர்.
" உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆனால் அதற்குப் பொருத்தமா கதைகள் வராத காரணத்தால், இதுவரை வெளிவராத ட்யூன்களை எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் அதற்கு தகுந்தாற்போல, கதையையும் காட்சிகளையும் அமைத்துக்கொள்கிறோம்........"