வேதனையை, உங்களால் புரிந்துகொள்ள முடியும்!
கட்டிட காண்டிராக்டரை நம்பி அவன் நேரிடையாக கவனிக்காத காரணத்தால், அந்த பயங்கரத் தவறு எப்படி நேர்ந்தது என்று தெரியாமல் குமாரசாமி விழித்தான்.
கட்டிடம் எழும்பியுள்ள மனை, குமாரசாமியினுடையது அல்ல; வடிவேலுவின் மனை!
அன்று காலை, தனது மனையை கட்டிட காண்டிராக்டரை அழைத்து வந்து, வடிவேலு சர்வே நம்பர்படி செக் செய்தபோதுதான், தவறு கண்டுபிடிக்கப்பட்டு தகவல் குமாரசாமிக்கு வந்துசேர்ந்தது!
தகவல் அத்துடன் முடியவில்லை! வடிவேலு மறுநாளே கோர்ட்டில் மனு பதிவு செய்து புதுமனை புகுவிழாவை நிறுத்தப் போவதாக ஊரைக்கூட்டி எச்சரித்ததாக தகவல் நீண்டது!
குமாரசாமி, வடிவேலுவின் எச்சரிக்கையில் அதிசயப்படவில்லை. காரணம், வடிவேலுக்கும் அவனுக்கும் நெடுங்காலமாக தீராப்பகை!
இப்போது, குமாரசாமியைப் பழிவாங்க, நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளபோது, விடுவானா?
அது மட்டுமல்ல, வடிவேலுவின்பக்கம் நியாயமும் குமாரசாமியின்பக்கம் தவறும் உள்ளபோது, வடிவேலு சும்மா விடுவானா?
" ஊர் முழுதும் புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பா கொடுக்கறே! என்ன செய்யப்போகிறேன், பார்! கோர்ட் உத்தரவு வாங்கி, விழாவை தடுத்து நிறுத்தறேன், பார்! அவமானம் தாங்காம, நீ நட்டுக்குனு தொங்கப்போறே, பார்!"
இந்த ஆத்திரமான பேச்சை ஒரு எழுத்துப் பிசகாமல், குமாரசாமிக்கு தெரிவிக்க, ஆட்களுக்கா பஞ்சம்? இந்தமாதிரி சூழ்நிலைகள்தானே, அவர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல!
குமாரசாமிக்கு கட்டிடம் எழுப்ப ஆன பல லட்சங்கள் நஷ்டமாகப்போவதைப் பற்றிய கவலையைவிட, விழாவுக்கு எல்லோரும் வந்து கூடியிருக்கும்போது, வடிவேலு சத்தம் போட்டு விழாவை நிறுத்தினால், கூடியிருக்கிறவர்கள் அனைவரும் தன்மீது காரித் துப்புவார்களே, அந்த அவமானத்தை தன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தன்னைவிட, தன் மனைவியும் பெற்ற பிள்ளைகளும் அவமானத்தில் துடித்துப்போவார்களே, என்ன செய்வது?
ஒரு தீர்மானத்துடன், வீட்டுக்கு விரைந்து, கதவைத் தாளிட்டுவிட்டு, மனைவி, மக்களை அழைத்து தகவலைச் சொல்லி, அவமானத்தை சந்தித்து கூனிக் குறுகி சாவதைவிட, குடும்பமே உடனடியாக தற்கொலை செய்துகொள்வதே சிறந்தது என்று தெரிவித்து அவர்களை கட்டியணைத்து கதறினான்!
ஆனால், அவன் மனைவியோ, இருபத்தைந்து வயது மகனோ, இருபத்திரண்டு வயது மகளோ, சிறிதும் கலங்கவில்லை!