முகத்துடன் பழகினான்!
பெண் நர்ஸ் சில மாதங்களிலேயே தன்னை சரளா கன்னாபின்னான்னு திட்டுவதாகவும், பல்லால் கடிப்பதாகவும், சொன்னபடி கேட்க மறுப்பதாகவும், தன்னால் அவளை கவனித்துக் கொள்ள இயலாதென்றும் கூறி நின்றுவிட்டாள்.
வேறு வழியின்றி, சரவணன் தன் தாயை சிறப்பு விடுதியில் அனுமதிக்கும் முடிவு எடுத்தான்.
" அம்மா! திடீர்னு, நாம் வசிக்கிற இந்த வீட்டின் சொந்தக்காரன் நம்மை வீட்டை காலி பண்ணச் சவல்லிவிட்டான், அவனே இங்கு வசிக்கப் போகிறானாம். அதனாலே, வேறு ஒரு வீடு பார்த்திருக்கிறேன், நன்றாக உள்ளது. நீயும் வந்து பார்த்து உனக்கும் பிடித்திருந்தால், அந்த வீட்டுக்கு உடனே குடி போய்விடலாம். என்னுடன் வா!" என்று கூறி தாயை, சிறப்பு விடுதிக்கு அழைத்துச் சென்று காட்டினான்.
அங்கிருந்த வசதிகளை பார்த்துவிட்டு, சரளாவின் முகம் மலர்ந்தது. சரவணனுக்கு பெரிய ஆறுதல்!
தாயின் உடைகளையும் மற்ற தேவையான பெருட்களையும் எடுத்துக் கொண்டுவர, இருவரும் வீடு திரும்பினர்.
" அம்மா! உனக்கு அந்தப் புது வீடு பிடித்திருக்கிறதா? அல்லது வேறு வீடு பார்க்கலாமா?"
" சரவணா! அந்த வீடு ரொம்ப நல்லாயிருக்குடா! நாம அங்கேயே குடி போயிடலாம், வா!"
தன் தாய், வெகுளித்தனமாக, முகம் மலர்ந்து, சின்னக் குழந்தை போல குதித்துக்கொண்டு, தன் கையை பிடித்து இழுத்தவுடன், அதற்குமேல் சரவணனால் பொறுக்க முடியவில்லை.
இதயம் வெடித்து தாயைக் கட்டிக்கொண்டு கதறினான்.
" இறைவா! இதற்காகவா என்னை நீ பிறக்கவைத்தாய்? அம்மாவுக்கு நீ இழைத்திருக்கிற கொடுமை இதைவிடக் கொடிது என்றாலும், அந்தக் கொடுமையை அவள்உணராதபடி செய்ய, நோயைத் தந்து, அவளை காப்பாற்றிவிட்டாய்! அதுபோல, எனக்கும் ஒரு கவசம் தரமாட்டாயா? முடியவில்லை இறைவா! அதோ பார்! மலர்ந்த முகத்துடன், சின்னக் குழந்தைபோல, அறுபத்தைந்து வயது அம்மா ஆடி மகிழ்வதை! அவளுக்குத் தெரியுமா, நான் அவளை ஆடுமாடுகளை தொழுவத்தில் அடைப்பதுபோல, சிறப்பு விடுதியில் சிறை வைக்கப்போவதை!
இறைவா! கசாப்புக் கடைக்காரன் தனக்கு ஆசைகாட்டி, பலிபீடத்துக்கு அழைத்துச்செல்கிறான் என்பதை அறியாமல், தன் முன்னே காட்டப்படுகிற தழையின் பின்னே துள்ளிக் குதித்துச் செல்கிற ஆட்டைப்போல, அப்பாவியாக இருக்கிற என் தாயை நீ எந்தவித தயக்கமும் இல்லாமல், உடனே அழைத்துக் கொண்டுவிடேன்! இந்தக் கொடுமையைவிட, அந்த முடிவு எனக்கு உகந்ததாகப் படுகிறது! கருணை காட்டு, இறைவா!